Monday, August 24, 2009


செம்மொழி



--------------------------------------------------------------------------------



உலகில் தொன்மையான தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ள மொழிகள் சிலவற்றை செம்மொழிகள் என அறிவித்துள்ளனர். உலக மக்கள் பேசும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை 6760 என கணக்கிட்டுள்ளனர். இவற்றில் இந்தியாவில் மட்டும் 1652 மொழிகள் பேசப்படுவதாக மொழியிலாளர்கள் கூறுகின்றனர்.

மொழிகள் எண்ணிக்கை உலக அளவிலும் நம் நாட்டளவிலும் கூடுதலாக இருக்க ஒரே காரணம் ஆயிரக்கணக்கான பழங்குடி இன மக்கள் கொண்டது இந்த உலகம் என்பதே. மேற்காணும் ஆராயிரத்து எழுநூற்று அறுபது மொழிகளுக்கும் மொழிக் குடும்பம் உண்டு. அந்த மொழிக் குடும்பத்தில் தாய்மொழி எனும் மூலமொழியும் உண்டு. அம்மூலமொழிக்கு அடிப்படையான பிறிதொரு மொழிக் குடும்பத்துடன் உறவும் உண்டு. ஆக உலகம் பல மொழி பேசும் பல இனக் குழுக்களின், பல நிறத்தவர்களின், பல பண்பாடுகளின், பல திணை நிலங்களின் சங்கமம்.

திராவிட மொழிகளுக்கென்று குடும்பம் உண்டு. ஆறாயிரத்திற்கு மேற்பட்ட மொழிகளின் மூல மொழிகளுடைய எண்ணிக்கையை ஆய்ந்தால் சில நூறு மொழிகள் பட்டியலிடப்படலாம். அது போன்ற பட்டியலில் இரு பிரிவுகள் காணப்படும்.

1.இயற்கை மொழி
மனித இனத் தொடக்கத்தின் ஊடாகவே இணைந்து வளரும் மொழி இயற்கை மொழி.

2.செயற்கை மொழி
ஒரு இனக் கூட்டத்தாரிடம் இருந்து பிரிந்து புதியதொரு இனக் கூட்டமாக பல்கிப் பெருகும் சமூகம் இயற்கை மொழிக் கூறுகளின் அடிப்படையுடன் புதிதாகக் குடியேறிய சூழலுக்கு ஏற்றவாறு புதிய ஒலிக்குறிகளை தங்கள் மூதாதையர்களின் மூல மொழியுடன் கலந்து பேசும் போது பிறப்பவை செயற்கை மொழி.

இவ்வாறு தான் இன்று நூற்றுக்கணக்கான (மூல மொழிகளிலிருந்து) இயற்கை மொழிகளிலிருந்து கிளைத்து செயற்கை மொழித் தகுதியுடன் இருப்பவை பல்லாயிரம் மொழிகளாகும். திராவிட இயற்கை மொழிக் குடும்பமும் அவற்றில் ஒன்று. உலகின் தொன்மையான மொழிக் குடும்பம் என்ற பெருமையும் இவற்றிற்கு உண்டு.

திராவிட மொழிக் குடும்பத்தில் தாயாக இருப்பது தமிழ் மொழி. திராவிட மொழிக் குடும்பத்திலுள்ள மொழிகளின் எண்ணிக்கை 22. இதில் இலக்கியத் திறனுள்ள மொழிகள் இலக்கியத்திறன் இல்லா மொழிகள் என இருபிரிவுகள் உள்ளன.

பாகிஸ்தானிலுள்ள பலூசிஸ்தான் தொடங்கி மத்திய இந்தியாவில் வாழும் பழங்குடி திராவிட இன மக்கள், தென்னிந்தியாவில் கர்நாடகம், ஆந்திரம், மராட்டியம், கேரள எல்லைகள் மற்றும் மலைகளின் மீது வாழும் பழங்குடி இன திராவிடர்கள். தெற்கு ஆசிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், பிஜீ தீவு, தென்னாப்பிரிக்கா, இலங்கை (ஈழம்) எனப் பல்வேறு பகுதிகளில் திராவிட இன மொழிக் குடும்ப மக்கள் வாழ்கின்றனர்.

திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்பவை இலக்கியத் திறன் பெற்றவை. இலக்கியத் திறன் இன்றி பேச்சு வழக்கில் பயன்பாட்டிலுள்ள திராவிடக் கிளை மொழிகள் கொலமி, பார்ஜி, நாய்ன்னி, கோண்டி, குய், கூவி, கொண்டா, மால்ட்டா, ஒரயன், கோயா, போர்ரி, முதலான மொழிகள் பலவும் வட மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் பேசப்படுகிறது.

தமிழகம், கன்னட நாடு, தெலுங்கு நாடு மற்றும் மலையாள நாடுகளில் உள்ள அடர்ந்த காடுகளிலும், மேற்கு மலைத் தொடர்ச்சிப் பகுதியிலும் வாழ்ந்து வரும் பழங்குடி திராவிடர்கள் தோட, கோத், படக, கேடகு, துளு முதலான தமிழின் கிளை மொழிகளைப் பேசுகின்றனர். இவற்றில் துளு மொழிக்கு தற்போது வரிவடிவமும் இலக்கியங்கள் படைப்பாக்கமும் தொடங்கியுள்ளது.

இவ்வாறு திராவிட மொழிக் குடும்பத்தின் மூல மொழியான தமிழ் தோன்றி நின்று நிலைபெற்று செழிந்திருப்பதால் செம்மொழி எனும் தகுதி வழங்கியுள்ளனர். ஏற்கெனவே சீனம், ஹீப்ரு, பெர்சியன், அரபி, லத்தீன், கிரீக், சமஸ்கிருதம் முதலானவை இத் தகுதியைப் பெற்றுள்ளன. இந்தியாவில் செம்மொழியாக சமஸ்கிருதம் உள்ளது. இந்த வரிசையில் தற்போது தமிழும் இணைந்துள்ளது.

உலகில் உள்ள பல கண்டங்களில் ஒரே நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட செம்மொழிகள் இருக்கும் பெருமை இந்தியாவை மட்டுமே சாரும். அந்த வகையில் தமிழ், சமஸ்கிருதம் இரண்டும் தங்கள் தொன்மையால் உலக மொழிகளுக்கு முன்னோடியாய் விளங்குகின்ற்ன.

ஒரு மொழியை செம்மொழியாக தகுதி உயர்த்த மொழியியல் அடிப்படையில் விதிகள் வகுத்துள்ளனர். அந்த விதிகள் அனைத்தும் தமிழுக்குப் பொருந்தி வருவதால் செம்மொழி எனும் நிலைக்கு தமிழ் உயர்ந்து விட்டது. உலக இயற்கை மொழிகளிலேயே மிக மிக மூத்த மொழியாக தமிழ் இருப்பினும் அதற்கு உரிய காலத்தில் செம்மொழி எனும் மதிப்பு காலம் தாழ்த்தி வழங்கியுள்ளமை சற்றே நெருடலானது.

தகுதிகள்
செம்மொழிக்கான தகுதிகள் பதினோரு விதிகளாக வழங்குகின்றனர். அவை :

1. தொன்மை
2. தனித்தன்மை
3. பொதுமைப் பண்பு
4. நடுவு நிலைமை
5. தாய்மைப் பண்பு
6. பண்பாட்டுக் கலை அறிவு பட்டறிவு வெளிப்பாடு
7. பிற மொழித் தாக்கமில்லா தன்மை
8. இலக்கிய வளம்
9. உயர் சிந்தனை
10. கலை இலக்கியத் தனித்தன்மை
11. மொழிக் கோட்பாடு

1. தொன்மை

செம்மொழி நிலைக்கு ஒரு மொழி ஆயிரம் ஆண்டுக்கால தொன்மை படைத்ததாக விளங்க வேண்டும். தமிழோ ஆயிரமல்ல ஈராயிரம் ஆண்டிற்கும் மேலாகப் பேசி, எழுதி, படைத்து தனக்குள்ளே பெரும் இலக்கியச் செல்வங்களைக் கொண்டது. இதனை எவராலும் மறுக்கப்படாமல் ஏற்கத்தக்க அளவிற்கு இதன் தொன்மை சிறப்பானது. அத்துடனில்லாமல் இன்றளவும் உலகமெங்கும் பரவியுள்ள தமிழர்களின் பேச்சு மொழியாகவும், எழுத்து மொழியாகவும், கல்வி கற்கும் மொழியாகவும், படைப்பு புனைதலில் புதிய புதிய துறைகளிலும் நிகரற்று விளங்குவது அதன் தனிச் சிறப்பு.

2. தனித் தன்மை

பல்வேறு திணை நிலங்களிலும் திராவிட குடும்ப மொழிகள் கிளைத்திட வைத்த தமிழ், தாயாக விளங்கி தனக்கென ஒரு மொழிக் குடும்பத்தை உருவாக்கி தன்னைச் சுற்றி வேர்களாகவும், விழுதாகவும் மொழிகள் கிளைப்பினும் தன்னிலை மாறாத உன்னத நிலையுடன் நிலைபெற்று விளங்குவது இதன் தனித்தன்மையாகும்.

3. பொதுமைப் பண்பு

உலகின் எந்த இயற்கை மொழிக்கும் இல்லாத சிறப்புமிக்க இலக்கணக் கட்டமைப்பு கொண்டது தமிழ் மொழி. தமிழின் இலக்கணப் பொதுமைப் பண்பு நெறிகள் திராவிட மொழிக் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் இதர இயற்கை மொழி அனைத்தும் பயனுறும் வகையில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும்.

4. நடு நிலைமை

தமிழின் இலக்கண விதி உன்னத நெறியுடனான பன்முகத் தன்மை கொண்டது. எனினும் இதன் இலக்கண விதிகள் வேறு எதனுடனும் சாராமல் தனித்தியங்கி நடுநிலையுடன் விளங்குவது.

5. தாய்மைத் தன்மை

தமிழ் எனும் மூல மொழி தான் மட்டுமே என்ற தன்னலமின்றி தாய்மைப் பண்புடன் திராவிட மொழிக் குடும்பம் உருவாகிட அடிப்படையில் விளங்கியது. பேச்சு மொழியென்றும், இலக்கிய வளமிக்க மொழிகளென்றும், பல்வேறு தன்மையுள்ள மொழிக் குடும்பத்தில் முதலாய் ஏனையவற்றுக்குத் தொடக்கமாய் விளங்கும் தாய்மைப் பண்பு ஏனைய இயற்கை மொழிகளை விட சிறப்பானது.

6. பண்பாட்டுக் கலையறிவு பட்டறிவின் வெளிப்பாடு

தமிழின் உன்னதமே அதன் இலக்கிய வளங்கள் தாம். தமிழரின் அகத்திணைக் கோட்பாடும், புறத்திணைக் கோட்பாடும் இலக்கியப் படைப்பாளர்களான முன்னோர்களின் பண்பாட்டுக் கலையறிவின் வெளிப்பாடாகும். அகத்திணை புறத்திணை மட்டுமல்லாமல் மெய்யியல் கோட்பாடும், அறவழிக் கோட்பாடும் வேறெந்த இயற்கை மொழிப் படைப்பிலும் தமிழில் உள்ள அளவுக்கு இல்லை. இந்த இலக்கிய வளமே தமிழ்ப் புலவர் பெருமக்களின் அறிவுப் புலன் சான்றாக இன்றளவும் திகழ்கிறது.

7. பிறமொழித் தாக்கமில்லா தனித் தன்மை

உலகில் நிலவும் மொழிக் குடும்பங்களில் மூல மொழியாய்த் திகழும் மொழிகள் யாவும் வேர்ச் சொல்லாக்கத் திறன் குறைவால் பிறமொழிகளின் கூறுகளை சில துறைகளில் தாங்கி நிற்கின்றன.

வினைகளால் ஒரு புதிய துறை சார்ந்த சொற்களை தமிழில் எளிதாக உருவாக்கும் அளவுக்கு இலக்கண வளம் செறிந்தது தமிழ். ஆகையினால் கடந்த காலமாயினும் சரி நிகழ்காலமாயினும் சரி எதிர்காலமாயினும் சரி எக்காலத்திலும் சமூகப் பண்பாட்டில் நிகழும் மாற்றங்களுக்கேற்ப தனித் தன்மையுடன் தனக்கேயுரிய இலக்கண செழுமையுடன் தமிழில் புதிய சொற்களை, துறைகளை உருவாக்குதல் எளிது.

காட்டாக, கம்ப்யூட்டர் எனும் 20ஆம் நூற்றாண்டு சாதனம். உலகெங்கும் பல துறைகளில் பரவியது போன்றே தமிழ் நிலத்திலும் காலூன்றியது. பிறமொழிகள் அதில் வழங்கும் துறை சார்ந்த சொற்களை நேரடியாகப் பயன்படுத்தும் நிலையில் தமிழில் அதனை பொருளுணர்ந்து கணியம், கணினி, கணிப்பொறி என ஆக்கம் செய்து பயன்படுத்தல் ஒன்றே தமிழின் பிறமொழி கலவாத் தனிந்தன்மை விளங்கிக் கொள்ளத்தக்கது.

8. இலக்கிய வளம்

தமிழர் தமிழ் இனம் எனும் மக்களினத்தைத் தெளிவாக அறியக்கூடிய காலக் கண்ணாடியாக விளங்குவது தமிழில் உள்ள இலக்கியங்களே. இலக்கியங்கள் வழியாக தமிழரைப் பார்க்கும் போது தமிழ் நிலத்தில் ஓங்கி இருந்த பண்பாட்டை, சமூக, பொருளாதார, இயற்கைக் கோட்பாட்டுடன் இணைந்த தமிழரின் வாழ்வை, வளத்தை அறிய இயலும்.

சங்க காலத்திலிருந்து தொடங்கும் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒவ்வொரு காலம் தோறும் அந்தந்த சூழல்களுக்கேற்ப அரசன், தலைவன், தெய்வம், அற வாழ்க்கை, அக வாழ்க்கை, புற வாழ்க்கை, வீரம், இயற்கை வளம், பழக்க வழக்கம், வழிபாட்டு முறைகள் என்பன போன்றவற்றின் தாக்கம் எப்போதெல்லாம் அதிகரிக்கின்றதோ அப்போதெல்லாம் அது தொடர்பான இலக்கியங்கள் படைக்கப்பட்டன. எந்த இலக்கியமாக இருந்தாலும் அதில் கையாளப்படும் மொழியின் ஓசை, எழுத்து, சொல், பொருள் போன்றவை பொதுமைப் பண்புடன் துலங்கும் வகையில் இலக்கணக் கட்டமைப்புடன் இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளது.

தமிழிலக்கியத்தின் சிறப்பு : பொதுவில் இத்தகைய இலக்கியப் படைப்புகள் தனிநபர், தன்னார்வக்குழு, அரசு நிறுவனம் எனும் மூன்று தளங்களில் உருவாக்கப்பட்டன. சிற்சில இலக்கியம் தனிப்புலவர்களால் உருவாக்கப்பட்டது. அதைப் போலவே கூட்டாக புலவர்கள் குழுக்களும் நூல்களைப் படைத்துள்ளனர். இது போன்ற படைப்பிலக்கியப் பணிகளுக்கு கொடையாளர்களாக அரசர்கள், அரசாங்கம் விளங்கியுள்ளது. சில அரசர்களே புலமைமிக்கவர்களாக விளங்கி இருந்தமையால் நேரடி இலக்கியப் படைப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

பெரும்பாலான சங்க இலக்கிய நூல்கள் புலவர்கள் அமர்ந்த பெரும் குழுவால் உருவாக்கப்பட்டு அவைகளை பிரிதொரு புலவர் குழு அந்த இலக்கிய திறனை அதன் மொழியமைப்பை ஆய்வு செய்வர். பிறிதொரு புலவர் குழு. அப்படைப்பு எக்காலமும் தமிழர்களுக்குப் பொதுவில் பயன்பட வேண்டும் எனும் உயரிய சிந்தனையால் அதன் இலக்கணக் கட்டமைப்பை ஆய்ந்திடுவர். இவ்வாறு ஒரு படைப்பு ஆய்வுக்குப்பின்னரே மக்களை அடைந்ததால் மொழிப் பயன்பாடு, பொதுமைப்பணபாடு தமிழரிடம் மிகுந்திருந்தது. தமிழ் இலக்கிய நூல்களில் கற்பனை நயத்தை விட இயைபுறு நோக்கு அதிகமிருக்கும். இயற்கையோடு இணைந்த வாழ்வியல் பண்பாட்டை தமிழர்கள் கொண்டிருந்ததால் அது இலக்கியப் படைப்புகளிலும் எதிரொலித்தன.
தமிழ் இலக்கியப் படைப்புகள் சங்க காலம் தொடங்கி 16ஆம் நூற்றாண்டு வரை செய்யுள் நடையிலேயே படைப்புகள் உருவாக்கம் நிகழ்ந்துள்ளது. ஐரோப்பியர் வருகைக்குப் பின்னரே உரைநடை எனும் புதிய நடை தமிழில் இடம் பெற்றது. பின்னர் ஈழத்து ஆறுமுகநாவலர் தொடங்கி நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலியார், திரு.வி.க. வரை பலர் உரை நடை இலக்கியம் வளர வித்திட்டனர். மேலைநாட்டு இலக்கியங்களையொத்த புதினங்கள், சிறுகதைகள் கட்டுரைகள் எனத் தமிழிலக்கியம் உரைநடை பரிமாணம் பெற்றது. செய்யுள் நடைகளில் படைத்த இலக்கியங்களில் இலக்கணக் கட்டமைப்புடன் பல்வேறு சிற்றிலக்கியங்களும், காப்பியங்களும் விரவியுள்ளன. இவற்றில் தூது, பிள்ளைத் தமிழ், பரணி, கலம்பகம், குறவஞ்சி, பள்ளு, உலா, பல்சந்தம் எனச் செய்யுள் வடிவ இலக்கியத்துள் உறுப்புகளாக விளங்குகிறது.
இது போலவே மரபு நடைச் செய்யுள் வடிவிலிருந்து புதுக்கவிதை, அய்க்கூ எனும் வடிவுடனும் தமிழ்க் கவிதை படைக்கப்படுகிறது.

தமிழ் தன் இலக்கியச் செல்வங்களால் இயைபுறு, கற்பனை இலக்கியத்துடன் நில்லாமல் தொழில் நுட்பம் சார்ந்த அறிவியல் நூல்கள் படைப்பாக்கத்திற்கும் உட்பட்டுள்ளது. படைப்பின் எந்த உறுப்பாக இருப்பினும் அதற்கேற்ற சொல்வளமும், பொருள் வளமும் தமிழில் சிறப்புடன் விளங்குவதால் உலக இயற்கை மொழிகளின் இலக்கிய தளத்தில் தமிழுக்கென தனித்துவமான இடமுள்ளது.

9. உயர் சிந்தனை

இலக்கியத்தில் உயர் சிந்தனை என்பது அது எத்தகைய படைப்பாக விளங்கிடினும் மக்கள் சமூகத்திற்கு பயன் விளைவிப்பதாக விளங்குதலே. இந்த அடிப்படைதான் தமிழ் இலக்கியங்களின் கருப் பொருளாக விளங்குகின்றன. தமிழ் இலக்கியங்கள் எத்தகைய காலத்தவையாக இருப்பினும் அவை மானுடம் போற்றும் உயர் சிந்தனைகளின் தொகுப்பாகவே மிளிர்வதைக் காணலாம். சங்க இலக்கியங்களில் பாடுபொருளாக விளங்கும் அகத்திணையும், புறத்திணையும், அறவியலும் தமிழர் வாழ்வுடன் இணைந்த உயர் சிந்தனை மரபாகும். உயர் சிந்தனை மரபுகள் இலக்கியத்தில் நிலை பெற்றிட வேண்டி இலக்கண நெறிகள் பிழையுற பின்பற்றப்பட்டன. தனிமனிதர் தொடங்கி சமூகம், அரசு என்ற மூன்று நிலைகளிலும் கோட்பாடுகளை, வாழ்வியல் நெறிகளை வலியுறுத்தும் தமிழ் இலக்கியங்களில் உள்ள உயர்ந்த சிந்தனை மரபு உலக சிந்தனை மரபிலிருந்து உயர்ந்தோங்கியவை என்பது மறுக்கவியலாது.

10. கலை இலக்கிய தனித் தன்மை வெளிப்பாடு

தமிழ் இலக்கியங்களில் திகழும் கலை நயம் தனித் தன்மை பெற்றது. தமிழ் இலக்கியங்களில் தனிப்பாடலாயினும், புலவர்கள் குழு படைத்து, தொகுத்த பாடலாயினும் அரசர்கள் அரசு உதவியுடன் படைப்புகளை உருவாக்கிய இலக்கியங்களில் இழையோடும் கலை நயமும், கவி நயமும் போற்றத்தக்கவை.

ஏழைப்புலவரான சத்திமுத்தாப் புலவர் அக்காலத்தில் பாடிப்பரிசு பெறும் வண்ணம் ஓர் ஊருக்குச் சென்றார். அது பனிக்காலம் என்பதால் மேலாடை இல்லா கவிஞர் குளிர்தாங்காமல் ஊர் புறத்தே இருந்த குட்டிச் சுவருக்கருகில் நடு நடுங்கி இருந்தார். அச்சமயம் இரைதேடப் பறந்த நாரையொன்றைப் பார்த்த சத்திமுத்தாப் புலவரின் சிந்தனை கவிபுனையத் தொடங்கியது. அவர் கவிதையை உரக்கக் கூறிய போது அந்த வழியாக இரவுக் காவலுக்குத் தாமே பொறுப்பேற்ற அவ்வூர் அரசன் குட்டிச் சுவரருகே ஒரு கவிதை ஒலிப்பதைக் கண்டு கூர்மையாக அதைக் கேட்டனன்.

"நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயு நின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
வட திசைக்கு ஏகு வீராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுட் டங்கி
நனைசுவர்க் கூறைகளை குரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலே தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென வுயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனும் எனுமே"

என்று பாடினார் சத்திமுத்தப் புலவர். பாடி முடித்ததும் மறைவிலிருந்த அரசன் அவரறியாமல் தன் மேலாடையை அவர் மேல் போர்த்துமாறு வீசி விட்டு உடனிருந்த காவலரை பணிந்து இப்புலவரை அரண்மனைக்கு அழைத்து வர ஆணையிட்டுச் சென்றான்.

தமிழகத்தை ஆண்ட பல அரசர்களும் சிறந்த புலமையுடையோர். இயற்கையோடு இணைந்த வாழ்வில் ஊறித் திளைப்பவர்கள். அதனால் அவர்கள் நாட்டு நலத்துடனேயே தங்களின் புலமை வளர்க்கும் திறத்தால் அறிவு சார் புலவர் பெருமக்கள் எப்போதும் அரசவையில் சூழ்ந்திருக்குமாறு வாழ்ந்தனர். இது போன்ற அவைக்களத்தில்தான் கருத்துப் பரிமாற்றம், புதிய பொருட்களை பற்றிய ஆய்வு, இலக்கியம் படைத்தல் போன்ற தமிழ்ப் பணிகள் நடந்தது. மேற்காணும் அரசனும் அத்தகையவனே. நாரையின் கூர்மையான நீள மூக்கிற்கு இயற்கையான எடுத்துக்காட்டை அறிய பல புலவர்களையும், நூல்களையும் ஆய்வு செய்தும் சரியான விடை தெரியாத நிலையில் அரசனின் ஐயத்தையும் போக்கி, தன் நிலையையும் தன் மனைவியின் பிரிவாற்றாமையையும் நயம்படக் கூறிப் பாடிய செய்யுள்.

ஒரு புலவனின் புலமை அவன் வறுமை. அரசனின் ஐயம் என்பவற்றை மட்டும் கொண்டதல்ல. அந்நாளில் ஆள்வோரும், புனைவோரும் இயற்கையோடு இணைந்த இயல்பு வாழ்க்கையில் திளைத்தனர். அவர்கள் வாழ்க்கை முழுவதும் ஒரு கோட்பாட்டுடன் விளங்கியுள்ளது. வாழ்வதற்கேற்ற நிலம், காலம் அமையப் பெற்றதால் அன்பு தழைக்கும் அமைதி வாழ்வை கொண்டிருந்தனர். அதனால் அவர்களின் சிந்தனை எச்சூழலிலும் இயற்கை வயப்பட்டதாகவே விளங்கியுள்ளது. இந்த பண்பே பொதுமையாக இக்கால இலக்கியங்களிலும் வெளிப்பாடாக விளங்குகிறது.

11. மொழிக்கோட்பாடு

உலகில் சில இனங்களின் அடையாளமாக மொழி காணப்படுகிறது. அந்த மொழியில் படைக்கப்பட்டுள்ள படைப்புகளும், மொழியின் பயன்பாடும், அதன் பொதுமைப்பண்புகளும் எல்லா காலங்களுக்கும் பொருந்தும் வகையில் மொழியானது தனக்குள் உரியவாறு கட்டமைப்பைக் கொண்டிருப்பதே அம் மொழியின் அடிப்படைக் கோட்பாடாகும். இந்த அரும்பண்புகள் தமிழுக்குண்டு.

மொழியியலார் ஒரு மொழியை மதிப்பிடுகையில் மொழியில் உருவான இலக்கியங்களை திறனாய்வு செய்வர். அதில் அம்மொழிக்குரிய இனம், அது வாழ்ந்த, வாழ்ந்துவரும் சூழல், காலம் எனும் மூன்றையும் நோக்குவர்.

ஏனெனில் ஒரு மொழியால் உருவான இலக்கியம் அச்சமூகத்தை மட்டுமே நமக்குத் தெரிவிப்பவை அல்ல. கூடவே அச்சமூகத்தை தொடர்ந்து வரும் மரபார்ந்த பண்பு நலன்கள் பலவற்றையும் தெரிவிக்கின்றன.

எனவே தான் முன்னோர்கள் தமிழ் மொழிகளின் படைப்புகள் சமுதாயத்தில் தாக்கத்தை உருவாக்கும் வல்லமை கொண்டது என்கிற காரணத்தால் இலக்கியங்கள் கற்பதற்கும், கற்பிப்பதற்கும் வழங்கும்போது பொருளமைதி குறித்த கோட்பாட்டை வகுத்தனர். இந்த கோட்பாட்டை நெறிபிறழாமல் விளங்க இலக்கணத்தை வகுத்தனர். அதனால் தான் தமிழ்மொழி தனக்குள்ளே இலக்கணம் என்கிற கட்டமைப்பை பெற்றுள்ளதால் தரமிக்க இலக்கியப் படைப்புகள் அனைத்தும் சங்ககாலம் முதல் ஓர் ஒழுங்கமைதியுடன் பேணப்பட்டுவருகிறது.

அத்துடன் வளர்ந்து வரும் புதிய துறைகள் எதுவென்றாலும் அதனையும் ஏற்று தனித்தன்மை மாறாமல் தூய தமிழ் சொற்களிலேயே அத்துறைகளை அறியும் வண்ணம் சீரிளமைத் திறனுடன் தமிழ் மொழி விளங்குகிறது. இத்திறனே அதன் கோட்பாடாகும்.

இந்தப் பதினோரு தகுதிப்பாடுகளும் தமிழுக்கு மட்டுமே பொருந்துவனவாகும் என்பதுதான் தனிச் சிறப்பு சம்ஸ்கிருதத்துக்கு ஏழு தகுதிப்பாடுகளும், லத்தீன், கிரேக்க மொழிகளுக்கு எட்டுத் தகுதிப்பாடுகளும் மட்டுமே பொருந்துகின்றன என்பது மொழியியலாளர் கணிப்பு.


--------------------------------------------------------------------------------

| வரலாறு | தனிச்சிறப்பு | செம்மொழி| தமிழறிஞர்கள் | நூல்கள் | ஆய்வு வட்டம்| மாணவர் வட்டம்|

--------------------------------------------------------------------------------

© 2005 Kaniyatamil Software
தமிழின் வரலாறு



--------------------------------------------------------------------------------

தமிழினத்தின் சிறப்பை அறிய வேண்டுமெனில் தமிழ் மொழியைப்பற்றி அறிதல் வேண்டும். மொழியின் இலக்கண கட்டமைப்பில் திகழக்கூடிய திகட்டாத இலக்கியங்களை அறிதல் நலம். இவைகளுக்கெல்லாம் தொடக்கமாகத் திகழும் தமிழ் வரிவடிவங்களைப் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது சிறப்பாகும். ஏனெனில் பிறிதொரு உதவி ஏதுமின்றி தமிழினம் தனக்காக, தானே முயன்று உருவாக்கிய மொழியே தமிழ். இத்தனித்துவமே தமிழினத்தின் சிறப்பு. இது குறித்து அறிய இதன் வரலாற்றை நான்கெனப் பகுத்து அதன் தோற்றத்தையும், தனித்துவத்தையும் விரிவாகப் பார்ப்போம். அவையாவன..

மொழி வரலாறு
இலக்கிய வரலாறு
இன வரலாறு
தமிழ் எழுத்து வரலாறு



மொழியின் தோற்றம்
ஒரு அமைப்போ, சமுதாயமோ தன் கருத்துக்களை பரிமாறிடவும், ஒத்த கருத்தைப் பகிர்ந்து கொள்ளவும் அவசியம் தேவை மொழி. தமிழர்கள் பேசிய மொழி எக்காலத்தைச் சேர்ந்தது, என்கிற வினாவுக்கு அறிஞருலகம் தெளிவாகவே விடை தருகிறது.

அகழ்வு ஆய்விலும் பல இடங்களில் காணப்படும் கல்வெட்டுக்கள், பாறை செதுக்கல்களில் உள்ள ஆதாரங்கள் கிடைத்த காலம் வரலாற்றுக் காலமெனவும், சான்றுகள் இல்லாத பழமையான மக்கள் வசித்த இருப்பிடங்கள், அங்கு கண்ட சீரற்ற கருவிகளால் கற்காலம் அதாவது கல்வி அறிவு, சிந்திக்கும் திறனற்ற வளர்ச்சியுறா காலத்தை பழைய கற்காலம், புதிய கற்காலம் என பிரித்து வழங்கிடுவர்.

சிந்தனை வளர்ச்சியே நாகரிக காலத்தின் தொடக்கம், அத்துடன் வேட்டை கருவிகளை சீராக செப்பனிட்டுப் பயன்படுத்தத் தொடங்கிய போது ஏற்பட்டதுதான் மொழித் தோற்றத்தின் காலமாகும்.

இவ்வாறான மொழியின் தோற்றம் ஏற்பட பல்வேறு கட்டங்களை புதிய கற்காலம் கொண்டிருந்தது. ஒலிகளைக் கூர்மையாக அறிந்து, புரிந்து கொள்வது தொடக்கமாகும். பின்னர் புள்ளினங்கள், விலங்குகளின் ஓசை போன்றே தாமும் ஒலி எழுப்ப முயன்று ஒலியை வெளிப்படுத்தியது ஒரு கட்டம். இதனைக் கேட்பொலிக் காலம் என்பர்.

செவியால் கேட்ட ஒலிக்குத்தக்கவாறு தாம் பார்த்ததை, கேட்ட ஒலிகளை நினைவில் தேக்கி, சிந்தித்து மறுபடியும் அவற்றை கண்ட போதும், கேட்ட போதும் சக மனிதருக்கு சுட்டிக் காட்டும் அல்லது அந்த உணர்வைப் பகிர்ந்து கொள்ளும், பரிமாறிக் கொள்ளும் காலமே சுட்டொலிக் காலம் எனலாம்.

கேட்பொலியின் செழுமையும் சுட்டொலியின் பயனும் இணைந்த போது அழுத்தமான சைகைகள் வாயிலாக உணர்வுகளை வெளிப்படுத்தும் காலம் தோன்றியிருக்கலாம்.

கேட்பொலி, சுட்டொலி, சைகைகளுக்கு பின் ஒரே விதமான ஓசை நயம் அச் சமூகத்தில் பகிர்ந்திடும் போது ஓசைகள் ஒரு வடிவாகி ஒரு மொழியாய் தோன்றியது. தமிழும் இவ்வாறு தான் தோன்றியதாக மொழியியல் ஆய்வில் தன்னையே ஒப்படைத்த தேவநேயப் பாவாணர் அவர்கள் கருத்துரைக்கிறார்.



இலக்கிய தோற்றம்

மனித மனங்களில் தோன்றும் கருத்துக்களின் பரிமாற்ற சாதனமே இலக்கிய பதிவுகள். இலக்கியம் என்பது எல்லோரும் அறியத்தக்க, அறியவேண்டிய ஒரு உண்மை போன்றதொரு கருத்து. அந்த கருத்தைச் சொல்பவரின் மேதைத் தன்மை, மேதைமையுடன் இணைந்த கற்பனை, கற்பனையை உருவகமாக்கும் ஒன்றைப் பற்றிய முழுமையான சேதி அறியும் ஆர்வம். இவைகளெல்லாம் ஒருங்கே சேர்ந்தால் தான் இலக்கியம் உருவாகும்.

இது போன்ற தன்மை கொண்ட ஏராளமான இலக்கியங்கள் வேறெந்த இயற்கை மொழியிலும் இந்தளவுக்குப் படைக்கப்படவில்லை. தமிழில்தான் உண்டு.

சங்க காலத்திற்கு முன்பே இலக்கியம் என்பது இருந்துள்ளது. அக்காலப்புலவோர் புனைந்த பல பாடல்கள் வாய் மொழியாக, வழிவழியாகக் கூறி இரசிக்கும் பண்பு மிகுந்திருந்தது. பின்னர் வாய்மொழி இலக்கிய காலத்தின் சீரிய மேம்பாடாக உருவானது பதிவு செய்து பாதுகாக்கும் ஏட்டிலக்கிய காலமாகும்.

ஏட்டிலக்கிய காலம் தொடங்கி பலநூறு ஆண்டிற்குப் பின் அறிவியல் மேம்பாட்டால் ஒரு சுவடி இலக்கியம் ஆயிரக்கணக்கான நூல் பிரதியாக மாறியது. இது இலக்கியப் பதிவு காலமாகும்.

இவ்வாறான இலக்கியப் பதிவின் போதுதான் மூல ஏட்டுச் சுவடிகள் பலவும் பதிப்பிக்கப்பட்டதுடன் மூல இலக்கியங்களுக்கு விளக்கவுரை, பதிப்புரை, பதவுரை என இலக்கியத் தளம் வாசிப்பிற்கு எளிதானது. தமிழின் சங்க இலக்கியம் அனைத்தும் செய்யுள் வடிவங்கள்.
இச் செய்யுள் வடிவ இலக்கியங்களுக்கு குறுகிய அடிகளைக் கொண்ட தனிப்பாடல்கள், நூற்றுக்கு மேற்பட்ட அடிகளைக் கொண்ட பாடல்கள், தொடர் நிலைச் செய்யுளாக வரும் காப்பியங்கள் எனப்பல வகையுள்ளது.

இச்செய்யுள்களை படைக்கும் புலவர்கள் அதற்கென வகுக்கப்பட்டுள்ள இலக்கண நெறிகளைக் கையாண்டுள்ளனர். அந்த இலக்கண நெறிகள் இன்றும் கையாளப்பட்டு மரபு செய்யுள்களில் பாடல்கள் புனைகின்றனர்.

விருந்தே தானும்
புதுவது கிளந்த யாப்பின் மேற்றே

என தொல்காப்பியர் யாப்பு எனும் செய்யுள் படைப்புக்கு நெறிவகுக்கிறார். இதனால் எத்துறையாயினும் தமிழ் மொழியை அத்துறைக்கு ஏற்றவாறு பயன்படுத்திட இயல்கிறது.



இனத் தோற்றம்

மொழிதான் ஒரு இனத்தின் மூலம் மொழியைப் பயன்படுத்தும் இனக் குழுக்களை வகைப்படுத்தும் போது அம்மொழி பேசும் கூட்டம், சமூகம், நாட்டவர்கள் என்கிற பல உள்ளார்ந்த அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒரு இனம் அடையாளம் காணப்படுகிறது.
இனங்கள் பேசும் மொழி இரு வகைப்படும் ஒன்று இயற்கை மொழி பிரிதொன்று உருவான மொழி.
இயற்கை மொழி பலவும் மனித இனத்தொடக்க காலத்திலிருந்து மக்கள் பயன்பாட்டில் இருப்பது.
உருவான மொழி பல இனத்திலிருந்து பிரிந்தவர்கள் கூடி தமக்குள் ஒரு பரிமாற்ற சாதனமாகப் பயன்படுத்தும் பொருட்டு உருவாக்கிக் கொள்ளும் மொழி. காட்டாக ஆங்கிலத்தைக் குறிப்பிடலாம்.

தமிழர் தமிழைத் தங்கள் மொழியாகக் கொண்டதால் தமிழினம் என சுட்டப்படுகிற்து. இயற்கை மொழிக் குடும்பத்தில் தமிழ் பழமையானது. அதன் பழமையின் கால அளவைத் தெளிவாக வரையறை செய்ய இயலாத அளவுக்கு பல்லாயிரம் ஆண்டுகால மனித நாகரீக காலத்தின் வரையரைகளான பழங்கற்காலம், புதிய கற்காலம் என்பவற்றோடு தொடர்புடையது.

மானுடவியல் ஆய்வாளர்கள் உலகளவிலான மானுட சமூகத்தை நான்கு பிரிவாக பிரித்து அறிவித்துள்ளனர்.

1.திராவிட இனம்
2.ஆப்பிரிக்க இனம்
3.மங்கோலிய இனம்
4.ஐரோப்பிய இனம்.

மேற்காணும் இந்த நிலஅளவிலான இனக்குழுக்களின்அடையாளம் உடல் அமைப்பு, தலைமயிரின் வடிவம், தோலின் நிறம், முக அமைப்பு என்கிற பன்முகத் தன்மையான ஆய்வில் மூலமாக விளங்கும். இந்த நான்கு இனப்பிரிவுகளில் தனித்த, ஒன்றுடன் ஒன்று கலந்த மனித இனங்களே இன்று உலகெங்கும் உள்ளனர்.
அந்த வகையில் க்வார்ட்ஸ் எனப்படும் இயற்கையாக நிலத்தில் உருவாகும் தனிமமான படிகக் கற்களை பழங்கால திராவிட இனம் பயன்படுத்தத் தொடங்கியது. நிலத்தில் விளையும் இந்த படிகக் கற்கள் உறுதியாகவும், கூர்மையாகவும் விளங்கத்தக்கது. இதனைப் பயன்படுத்திய காலமே பழங்கற் காலம். உலகில் அதே சமயம் பிற இனமக்களும் ஆங்காங்கு நிலத்தில் கிடைத்திட்ட கூர்மையான கூழாங்கற்கள், பாறைக் கற்களை வேட்டைக்குப் பயன்படுத்தினர்.

தொடக்க கால மனிதன் கரடுமுரடான கற்களைப் பயன்படுத்தி, பின்னர் பிரிதொரு கற்களால் ஏனைய ஆயுத கற்களைத் தயாரிக்கும் நிலைக்கு உயர்ந்தனர். இக்காலத்தை வரலாற்றாய்வாளர்கள் "லெவ்ல்லோசியன்" என்பர். வேட்டைக் கருவிகளை க்வார்ட்ஸ் கற்களில் தயாரிக்கத் தொடங்கிய திராவிட இனம் காலப்போக்கில் இதர பயன்பாட்டுக் கருவிகளையும் செய்யும் ஆற்றல் பெற்றது. திராவிடர்களின் நுண்ணறிவுத் திறன் வளர வளர கருவிகள் மட்டும் சீராகவில்லை, அவர்கள் உச்சரிக்கும் மொழிகளும் சீராகத் தொடங்கியது.

இவ்வாறுதான் திராவிட இனக் குழுக்களில் மூத்த மொழியான தமிழ் பேசப்பட்டு பெரியதொரு மனித இனத்தின் பயன்பாட்டில் விளங்கியது. காலப்போக்கில் திணை நிலங்களின் தன்மைகளுக்கேற்றவாறும் உணவிற்காகவும் நீர் நிலைகளை நாடி இடம் பெயரத் தொடங்கினர். இவ்வாறு இடம் பெயர்ந்து இந்தியா எங்கும் பரவிய திராவிட இனம், மூல மொழியான தமிழுடன் வேறு வகை ஒலிகளையும் சேர்த்து பிரிதொரு மொழிகளாகப் பயன்படுத்தத் தொடங்கியது.

திராவிட மொழிக் குடும்பத்தை மொழியியலார். தென் இந்தியத் திராவிடமொழிகள், மத்திய இந்திய திராவிட மொழிகள், வடஇந்திய திராவிட மொழிகள் எனப் பகுப்பார்கள். தென்னக திராவிட மொழிகளை இரண்டு பகுதியாக நோக்கப்படுகிறது. இலக்கிய வளமுள்ள திராவிட மொழிகள். இலக்கிய வளமில்லா திராவிட மொழிகள் என இதனை வரையறை செய்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்றவை இலக்கிய வளமிக்கவை.மலையின திராவிட மக்களால் பேசப்படும் தோடா, கோத்தர், படுகு, கேடகு, துளு, வர, கொலமி, நயினி முதலான மொழிகள் பேசப்படினும் இலக்கிய வளம் இல்லாதவை.அதே போன்று பலுகிஸ்தானில் திராவிட பழங்குடி மக்களால் பேசப்படும் பிரோகுய், மத்திய இந்தியாவில் பேசப்படும் பர்ஜி, ஒல்லரி, குய்யி, கோண்டி, பென்கோ, குவி, போர்ரி, கோய், குரூக், மோஸ்ரா முதலிய தொன்மை திராவிட மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளதேயன்றி இலக்கிய வளம் இல்லாதவை.

பெருங்கற்காலத் தொடக்கத்திலேயே திராவிட மொழிகளின் தாயான தமிழ் சீரிய பயன்பாட்டில் விளங்கியுள்ளது. அச்சமயம் பதிவு செய்திடும் சாதனமோ, வழிமுறைகளோ, அதனை உருவாக்கும் சிந்தனையோ எழவில்லை. காலப்போக்கில் பாறைகளைப் பண்படுத்தும் நுட்பம் அறிந்த வெகுகாலத்திற்குப் பின்புதான் பாறையில் செதுக்கத் தொடங்கி இருத்தல் கூடும். இந்தப் பதிவுகளைச் செய்திடும் முன்பு தமிழ் மொழி மனங்களிலும், மனத்திரைகளிலும் நினைவாற்றல் எனும் திறனாலேயே பதிவு செய்யப்பட்டன. மனித மனம் ஒன்றை அறிந்தவுடன் அதனை மறவாமல் நினைவில் நிறுத்தும் பொருட்டு இயல்பான இலக்கண சூத்திரங்கள் தமிழ் மொழியில் அன்றே பயன்படுத்தியுள்ளனர்.

திராவிட மொழிக் குடும்பத்திலிருந்து பலமொழிகள் பிரிந்தாலும் மூலமொழியான தமிழ் இன்றளவும் தன் நயத்தை இழக்காமல் என்றும் இளமையாக விளங்கக் காரணமே அதன் இலக்கண கட்டமைப்புதான்.
இயற்கை மொழியாம் தமிழ் தன் குடும்பத்திலிருந்து பிற திராவிட மொழிகள் பிரிந்த போதும் எவ்வித மாற்றமும் இல்லாமல் எத்தகைய மாற்றங்களுக்கு தன்னை ஆட்படுத்திக் கொள்ளும் வகையில் உரிய கட்டமைப்புடன் இயங்குவதால் கி.மு.ஆயிரமாவது ஆண்டுகளில் அதாவது கற்காலப் பண்பாட்டின் இடைக் காலத்திலேயே கிளை மொழிகள் பிரிந்தாலும் தனித்துவமாக இன்றும் துலங்கி வருகிறது.
இவ்வாறு மொழி மட்டுமே துலங்கவில்லை. தமிழும் அதைப் பேசும் தமிழினமும் உலகெங்கும் பரவி உலக மொழிகளில் தனக்கென ஓர் உன்னதமான நிலையை அடைந்துள்ளது. தமிழ் மொழியின் வளர்ச்சிதான் தமிழினத்தின் வளர்ச்சியும் என்பது நோக்கத்தக்கது.



வரிவடிவ வரலாறு

தமிழ் எழுத்துக்கள் இன்றைய வடிவிற்கு மாற்றம் காண பல நூற்றாண்டுகளைக் கடந்தன. ஒலியாய் விளங்கிய பேச்சுத் தமிழ் மொழி வரிவடிவாய் உருப்பெற்றிட்டது எக்காலம் எனும் ஆய்வு இன்னமும் தொடர்கிறது. எனினும் (ஒலியை வரிவடிவமாக்கும் திண்மை, அச்சிந்தனை எக்காலத்தில் உருவாகி இருக்கலாம் என்று யூகிப்பதற்கும் அந்த யூகங்கள் நிலை பெற்றிடவும் ஏராளமான சான்றுகள் அகழ்வு ஆய்வுகளில் கிடைத்துள்ளன.)
பொதுவாக தமிழ் எழுத்து வரிவடிவத்திற்கான சிந்தனை வடக்கிலிருந்து தென்னகமாம் தமிழ் நிலத்தில் புகுந்ததாக பல வரலாற்று தொல்லியலார் கூறுகின்றனர். எனினும் பேரறிஞர் பாவாணரின் கூற்றுப்படி மனித நாகரீக தோற்றமே தென்னகத்தில் தான் நிகழ்ந்தது. எனவே எத்தகைய ஆய்வுகளும் இங்கிருந்து தான் தொடங்க வேண்டும் என்கிறார். இது குறித்து அவர் கூறியது

"ஒரு வீட்டிற்கு ஆவணம் போன்றதே ஒரு நாட்டிற்கு உரிமை வரலாற்று சான்றாகும்.ஆயின் ஓர் ஆவணத்தில் எதிரிகளால் ஏதேனும் கரவடமாகச் சேர்க்கப்படலாம். அது போன்றே ஒரு நாட்டு வரலாறும் பகைவரால் அவரவர்க்கு ஏற்றவாறு மாற்றப்படலாம். ஆதலால் இவ்விரு வகையிலும் உரிமையாளர் விழிப்பாயிருந்து தம் உரிமையைப் போற்றிக் காத்துக் கொள்ள வேண்டும்" என்கிறார்.

இவருக்கு முன்னோடியாக பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, பி.டி.சீனிவாசய்யங்கார், வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர் போன்ற அறிஞர் பெருமக்களும் கூறியுள்ளனர்.
இவர்கள் கூற்று மெய்யே என்பது போல் அரிக்கமேடு, உறையூர் தொடங்கி ஈழம் வரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் காணப்பட்ட திராவிட வரிவடிவம் தமிழே என மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
அரிக்கமேட்டில் கிடைத்த பொருட்களில் பொரித்துள்ள எழுத்து வரி உருக்கள் கி.பி.முதல் நூற்றாண்டுக்கும் முன்னம் பொரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதே போன்ற எழுத்துருக்கள் ஈழத்தில் நிகழ்ந்த அகழ்விலும் கண்டறிந்துள்ளனர் என்பதை இலங்கை வரலாற்று அறிஞர் கருணா இரத்தினா சுட்டிக் காட்டுகிறார்.

புத்தர் காலத்திற்கு முன்பே கி.மு.5ஆம் நூற்றாண்டில் அதாவது அசோகரின் காலத்திற்கு சில நூற்றாண்டிற்கு முன்பே திராவிட நிலத்தில் வழக்கிலிருந்த மொழிகளைப் பற்றியும் வரிவடிவங்கள் பற்றியும் அசோகர் காலத்து பவுத்த நூலான லலிதவிஸ்தாரம் அன்றைக்கு வழக்கில் இருந்த பிராமி, திராவிட வரிவடிவங்களுடன் மொத்தம் அறுபத்து நான்கு வரிவடிவம் காணப்பெற்றதாகக் கூறுகிறது. அதைப் போன்றே சமண நூல் சமவயாங்க சூக்தமும், பன்னவான சூக்தமும் கி.மு.5ஆம் நூற்றாண்டில் பதினெட்டு வரிவடிவம் காணப்பட்டதாகவும் அதில் திராவிடமும் ஒன்று எனக் கூறுகிறது.தமிழ்கத்திலும், ஈழத்திலும் காணப்பட்ட தமிழ் வரிவடிவங்கள் ஒன்றுடன் ஒன்று ஒத்திருந்தன என்கிறார் ப்யூலர் எனும் அறிஞர்.

தமிழின் தொன்மை வரிவடிவம் தொடர்பான ஆய்வுகள் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் பெருமளவு தொடங்கின. தொடக்கத்தில் கல்வெட்டு, பாறை செதுக்கல் வரிவடிவங்களைப் படித்து விளக்கம் கூறி ஆய்வுக்கு வழிவகுத்தவர் பிரின்செப் எனும் ஆய்வாளராவார். இவ்வாறு ஆய்வில் வெளிப்பட்ட பல உண்மைகளை மேலும் தெளிவாக அறிஞர்கள் ஆய்வு செய்து ஒரு பட்டியலை வெளிட்டுள்ளனர். அதில் காலம் தோறும் தமிழ் வரிவடிவம் அதைப் பதிவு செய்யும் பொருட்களையொட்டி மாறுதலைக் கண்டே வந்துள்ளதை படத்தில் காண்க.

19ஆம் நூற்றாண்டு வரையுள்ள இந்த வரிவடிவங்கள். 17ஆம் நூற்றாண்டில் அச்சேறிய போது சுவடி எழுத்துக்களை ஒட்டியே காணப்பட்டன. பின்னர் வீரமா முனிவர் தமிழ் நெடுங்கணக்கில் உள்ள எழுத்தில் சீர்மை கண்டவுடன் தமிழின் வரிவடிவம் மேலும் அழகு பெற்றன. அது மேலும் ஹண்ட் எனும் அச்சுவியலாளரால் செம்மையாக ஈய அச்சுருக்களின் உதவியால் அதன் மொத்த வடிவமும் ஓர் உலகார்ந்த கட்டமைப்புக்குள் உருப்பெற்றது. காலங்கள் மாறிடினும் இன்று கணியத்தில் அழகுற தமிழ் தன் இளமையான தோற்றப் பொலிவுடன் விளங்கி வருகிறது.


--------------------------------------------------------------------------------

| வரலாறு | தனிச்சிறப்பு | செம்மொழி| தமிழறிஞர்கள் | நூல்கள் | ஆய்வு வட்டம்| மாணவர் வட்டம்|

India Tour

தொல்காப்பிய ஆய்வின் அணுகுமுறை

2007 ஏப்பிரல்
(பக்கம் 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35 )

தொல்காப்பிய ஆய்வின் அணுகுமுறை
க. பாலசுப்பிரமணியன்
இயக்குநர் [ஓய்வு], மொழியியல் உயராய்வு மையம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்


தொல்காப்பியம் நமக்கு இன்று கிடைக்கும் முதற்பழந்தமிழ் இலக்கண நூல். எனினும் அது தமிழின் முதல் இலக்கண நூல் அல்ல. உறுதியாகக் கால்கொண்டிருந்த தமிழ் இலக்கண மரபின் அடிப்படையில் உருவானது. பழைய உலக இலக்கண மரபுகளான கிரேக்க, உரோமானிய, வடமொழி மரபுகளிலிருந்து வேறுபட்டது (ஒ.நோ. அகத்தியலிங்கம், பாலசுப்பிரமணியன், 1974; பாலசுப்பிரமணியன், 2001: 82◌116). தொல்காப்பியத்திற்கு முந்தைய தமிழ் இலக்கண நூல்கள் இன்று கிடைக்கப் பெறாமையின் பழந்தமிழ் இலக்கண மரபின் ஒரே எடுத்துக்காட்டு வடிவமாக இன்று விளங்குவது. ஏனெனில், பின்வந்த இலக்கண நூல்கள் அனைத்தும் வடமொழி இலக்கண மரபின் தாக்கத்திற்கு உள்ளானவை (பாலசுப்பிரமணியன், 2001: 19◌36). எனவே தொல்காப்பியத்தின் கொள்கைப் பின்னணி, ஆராயப்படும் இலக்கணக் கூறுகளின் சிறப்பு, இலக்கணம் கூறும் முறை இவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ளுதல் பழந்தமிழ் இலக்கண மரபு என்ன என்று அறிந்து மீட்டுருவாக்கம் செய்வதற்கு இன்றியமையாதது ஆகும். தொல்காப்பிய ஆய்வின் நோக்கம் இதுவாகவே அமைய வேண்டும்.

தொல்காப்பிய ஆய்வின் தொடக்கமாக இளம்பூரணம் தொடங்கிய உரை நூல்களைக் கொள்ளலாம். இன்று நமக்கு விளங்காத, மொழி, பண்பாட்டு, வரலாற்றுக் காரணங்களால் உரைகள் அனைத்துமே தொல்காப்பியம் இயற்றப்பட்டு ஆயிரம் ஆண்டுகட்குப் பிறகே எழுதப்படலாயின. அக்கால கட்டத்திலேயே வடமொழி இலக்கண மரபின் தாக்கம் உரைகளில் காணப்படுகிறது. இன்றைய தொல்காப்பிய ஆய்வும் கடந்த நூற்றாண்டிலிருந்து தொடங்கியிருப்பினும் (கிருட்டினமூர்த்தி, 1990) பல்வகைத் தாக்கங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இன்றைய மேனாட்டு இலக்கண மரபு, சென்ற நூற்றாண்டின் ஃபிலாலஜி (Philology) எனப்படும். வரலாறு தழுவிய மொழி ஆராய்ச்சி மரபு, இன்று வளர்ந்துவரும் மொழியியல் மரபின் பல்வகைப் போக்குகள் அனைத்தின் தாக்கமும் தொல்காப்பிய ஆய்வில் உள்ளன. இதன் விளைவு மூன்று அதிகாரங்கள் கொண்ட முற்றிலக்கண நூலாகிய தொல்காப்பியத்தை ஒரு முழு நூலாக ஆராயாமல், பகுதிபகுதியாகப் பிரித்து எழுத்திகாரமும் சொல்லதிகாரமுமே மொழி அமைப்பைப் பேசுபவை; பொருளதிகாரம் அவற்றோடு தொடர்பற்ற பகுதி; அது பேசுவது இலக்கிய இலக்கணம், அணியிலக்கணம், ரசக்கோட்பாடு ஆகியவை என விளக்கப் படுகின்றன. இக்கருத்து வேறுபாட்டின் உச்சக்கட்டமாக எழுத்து, சொல்லதிகாரங்களே தொல்காப்பியரால் செய்யப்பட்டவை; பிற்கால ஆசிரியரால் பொருளதிகாரம் செய்யப்பட்டுப் பின்னால் இணைக்கப்பட்டது என்ற கருத்தும் உருவாயிற்று (ஒ.நோ. செல்வநாயகம், 1969, சுவலபில் 1970:20 F.N., 23; 1974 F.N., 67). இவ்வனைத்திற்கும் காரணம் தொல்காப்பிய ஆய்வின் அணுகுமுறையில் உள்ள குறைபாடுகளே. தொல்காப்பியத்தில் ஆசிரியர் கூறியுள்ள செய்திகளை, அவர் கொள்கைப் பின்னணியை, பிறமரபுகளின் தாக்கமின்றி முழுமையாகப் புரிந்துகொள்ள ஆய்வு அணுகுமுறை எவ்வாறு அமையவேண்டும் என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது. இவ்வணுகுமுறை (1) அறிவியல் வரலாற்று அணுகுமுறை, (2) மொழி வரலாற்று அணுகுமுறை, (3) ஒருங்கிணைந்த அணுகுமுறை, (4) அகநோக்கு, (5) தொல்காப்பிய அமைப்புத் தருக்க முறை அடிப்படையிலான அணுகுமுறை, (6) தொல்காப்பியத் தரவு அடிப்படை அணுகுமுறை என ஆறு வகைகளாகப் பிரித்துக் காணப்படுகிறது.

1. அறிவியல் வரலாற்று அணுகுமுறை

இலக்கண நூல் மொழிஅறிவியல் அல்லது மொழியியல் ஆய்வின் பயனாக எழுதப்படுவது. எனவே, ஒரு பழங்கால இலக்கண நூல் அறிவியல் வரலாற்றுக் (History of Science) கண்ணோட்டத்தில் ஆராயப்பட வேண்டும். அவ்விலக்கண நூல் தோன்றிய மொழியில், அத்துறையின் வளர்ச்சி வரலாற்றில், அந்நூலின் இடம், பங்களிப்பு ஆகியவை கண்டறியப்பட வேண்டும். அவ்வாறு ஆராயும் பொழுது, மொழியியலின் சுருக்க வரலாறு என்ற நூலில், ராபின்ஸ், அறிவியல், மொழியியல் வரலாற்று ஆய்வுபற்றிக் கூறும் பின்வரும் கருத்துகள் உட்கொள்ளப்பட வேண்டும். "ஓர் அறிவியல் துறையின் நோக்கங்கள் அதன் வரலாற்றில் காலப் போக்கில் மாறுபடுகின்றன. கடந்த கால ஆய்வுகளில் இன்றைய ஆய்வுக்குத் தொடர்புடையவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து ஆராயும் போக்கு தவிர்க்கப்பட வேண்டும். இன்றைய மொழியியலின் தர நிர்ணயக் கோட்பாடுகளைக் கடந்தகால வரலாற்று மொழியியலுக்கு உரியது எது என நிர்ணயம் செய்யப் பயன்படுத்தாமல், மொழியின் எந்தக் கூறுகள் சிறப்புடையனவாகவும், ஆராயத் தகுதி உடையனவாகவும், முறையான ஒழுங்கமைப்பு உடைய ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டனவோ அவை மொழியியல் வரலாற்றுக்கு உரியவை என உணர்ந்து புரிந்துகொள்ள வேண்டும்” (ராபின்ஸ், 1967: 2-4).

இக்கண்ணோட்டத்தில் தொல்காப்பியச் செய்திகள் அனைத்தும் மொழியமைப்புக்கு உரியனவாகவே கருதப்பட்டு ஆராயப்பட வேண்டும். இரண்டு அதிகாரங்கள் மொழி அமைப்புப்பற்றிப் பேசுவனவாகவும், மூன்றாம் அதிகாரம் வேறு செய்திகளைப் பேசுவதாகவும் கொள்வது அறிவியல், வரலாற்று அணுகுமுறைக்குப் பொருந்தாது. அவ்வாறு செய்வது இன்றைய மொழியியல் ஆய்வின் தரக் கோட்பாடுகளையும், வடமொழி போன்ற இலக்கண மரபுகளின் கொள்கை அடிப்படையையும் தொல்காப்பிய ஆய்வில் வலிந்து திணிப்பதாகவே அமையும். அது தனித்து நிற்கும் தொல்காப்பியரின் மொழி அமைப்புக் கொள்கையைப் புரிந்து கொள்வதற்கும் தடையாக அமையும். அவ்வாறன்றிப் பொருளதிகாரச் செய்திகளும் மொழியமைப்பிற்குரியனவே என்று காணும் பொழுது தொல்காப்பியரின் கொள்கைப் பின்னணியும் தொல்காப்பியத்திற்கு அடிப்படையான மொழி இலக்கண மாதிரிப் படிவமும் (theoretical model) புலனாகும். எனது அண்மைக்கால ஆய்வுகள் (பாலசுப்பிரமணியன், 1998, 1999, 2000) இவற்றை விளக்குகின்றன. அவற்றில் பொருளதிகாரம் ஆய்வது பழந்தமிழ் மொழியின் பொருண்மை அமைப்பே (Semantic structure) உவமவியல், மெய்ப்பாட்டியல், மரபியல் செய்திகளும் பொருண்மை அமைப்பிற்கு உரியனவே; செய்யுளியல் மட்டுமே இலக்கிய அமைப்பைப் பேசுவது எனக் கூறியுள்ளேன். அது பின்னர்ச் (5) சுருக்கமாக விளக்கப்படும்.

2. மொழிவரலாற்று அணுகுமுறை

இரண்டாயிரம் ஆண்டுகட்டு முன்பு எழுதப்பட்ட பழந்தமிழ் இலக்கணநூல் அன்றைய தமிழ் மொழியின் அமைப்பைப் பேசுவதே. காலப் போக்கில் மாற்றம் அடைவது மொழியின் இயல்பு.

கடிசொல் இல்லை காலத்துப் படினே ( தொல். சொல். 446 )
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே ( நன். 462 )

ஆகிய தொல்காப்பிய, நன்னூல் நூற்பாக்கள் மொழியின் மாற்றமடையும் இயல்பைத் தமிழ் இலக்கண ஆசிரியர் உணர்ந்திருந்தனர் என்பதைக் காட்டுகின்றன. ஆனால், உரையாசிரியரும் பிற்கால ஆய்வாளரும் தொல்காப்பிய நூற்பாக்களின் பொருளை அவ்வக்கால மொழி அமைப்பிற்கேற்ப மாற்றி அமைத்துக்கொள்கின்றனர். இது மொழி வரலாற்றின் உண்மைக்கு மாறானதாகும். பின்வரும் எடுத்துக்காட்டுகள் உரையாசிரியரும் ஆய்வாளரும் மொழி மாற்றத்தைக் கருத்திற் கொள்ளாது அவர்கால மொழியமைப்பிற்கு ஏற்பப் பொருள் கொண்டமையைக் காட்டும். எழுத்ததிகாரத்தில் வரும்.

மெய்யீறெல்லாம் புள்ளியொடு நிலையில் ( தொல். எழுத்து. 105 )
குற்றியலுகரமும் அற்றென மொழிப ( தொல். எழுத்து. 106 )
புள்ளீயிற்றுமுன் உயிர் தனித்து இயலாது மெய்யொடும் சிவணும் அவ்வியல் கெடுத்தே (தொல்.எழுத்து. 139)

ஆகிய நூற்பாக்களின் பொருள், மூலபாடத்தின் அடிப்படையில் கொண்டால் பின்வருமாறு அமையும்.

"மொழியீற்று மெய்கள் வரிவடிவில் புள்ளி பெறும் (105), மொழியீற்றுக் குற்றியலுகரங்களும் ஈற்று மெய்கள் போலப் புள்ளி பெறும் (106), புள்ளியீற்று எழுத்துகள் உயிர் முதன் மொழி வரும் பொழுது தனித்து ஒலிக்கப்படா; தம் தனி இயல்பை இழந்து வருமொழி மெய்யொடு சேரும் (139)".

உரையாசிரியர் காலத்து, ஈற்றுக் குற்றியலுகரம் புள்ளியிட்டு எழுதப்பெறும் வழக்கம் மாறியிருக்க வேண்டும். எனவே "குற்றியலுகரமும் அற்றென மொழிப (105)" என்று நூற்பாவிற்கு மாட்டேற்றால் வரும் நேர்பொருளை, "மொழி ஈற்றுக் குற்றியலுகரம் புள்ளிபெறும்" என்ற பொருளைத் தராது, முந்தைய "மெய்யீறெல்லாம் புள்ளியொடு நிலையல்" (105) என்ற நூற்பாவிற்கு "ஈற்று மெய் புள்ளிபெறும்" என்ற நேர்பொருளொடு, உயிர் முதன் மொழி வந்தவிடத்து அஃதேற இடம் கொடுக்கும்' என்ற பொருளையும் உய்த்துக்கொண்டு அடுத்த நூற்பாவிற்குரிய மாட்டேறு ஒருபுடைச் சேறல் என்ற உத்தியின் படி "குற்றியலுகரம் உயிரேற இடங்கொடுக்கும்" என்பதே பொருளாக உரையாசிரியர் கொள்கின்றனர். (அடிகளாசிரியன் (இளம்பூரணம்) 1969: 103). பின் "புள்ளீயிற்றுமுன்", (139) என்று தொடங்கும் புணரியல் நூற்பாவிலும் இவ்வாறே உம்மையால் பொருள் கொள்கின்றனர் (அடிகளாசிரியன், 1969:136; இராம. கோவிந்தசாமிபிள்ளை, 1967:131, 132).

உரையாசிரியர்கள் நூற்பா வரிசை முறையைப் பொருட்படுத்தாமல் அவர் கால எழுத்து முறையை உள்ளடக்கிக் கூறிய விளக்கம், பழந்தமிழ் ஒலியனியல் கூறு ஒன்றைப் புரிந்து கொள்ளாமையைக் காட்டுகிறது. மெய்யீற்றுச் சொற்களும் உயிர் முதல் மொழியும் அடுத்துவரும் தொடர்களின் அசை அமைப்பும் (syllabic structure) உயிரீற்றுச் சொற்களும் உயிர்முதல்மொழியும் வரும் தொடர்களின்அசையமைப்பும் மாறுபடுகின்றன. குற்றியலுகர ஈற்றுச் சொல்லும் மெய்யீற்றுச் சொல் போலவே செயல்படுகின்றன.

1.
மணி + அரிது > மணி யரிது (mani + yaritu)
2.
அவன் + அமரன் > அவ னமரன் (ava + namaran)
3.
நாகு + அரிது > நா கரிது

தொடர் (1) இல் உயிரீற்று மொழி முன் உயிரீறு வரும்பொழுது இரு சொற்களின் அசை அமைப்பிலும் எந்த மாற்றமும் இல்லை. உடம்படுமெய் வருமொழியின் முதலசையுடன் சென்றுவிடுகிறது. ஆனால் மெய்யீற்றுச் சொல்லின் நிலைமொழியின் ஈற்றசையின் பகுதியாக இருந்த மெய் (a+van) வரு மொழி உயிருடன் சேர்ந்து வருமொழி முதலசையின் பகுதியாக மாறிவிடுகிறது (ava na +ma+ran). இதே அவன் என்ற சொல்.

4. வந்தான் + அவன்> வந்தா-னவன் (Vanta: na+van)

என்ற தொடரில் மாறிவருவதைக் காணலாம். குற்றியலுகர ஈற்று மொழியிலும் இது நடைபெறுகிறது (3) நாகு + அரிது> நா கரிது, இங்கே நிலைமொழி அசையே கெடுவதைக் காணலாம். இது பிணைப்பு (liaison) எனப்படும் ஓர் ஒலியனியல் கூறு. பழந்தமிழில் வழங்கி இக்காலத் தமிழில் மறைந்த ஒன்று. பிரெஞ்சு மொழியிலும் இன்றைய தெலுங்கிலும் இன்னும் வழக்கில் இருப்பது (எ-டு: French: cest◌arbre> ce. tarbre ‘It is a tree’ தெலுங்கு: வாடு எக்கடா > வா -டெக்டா 'அவன் எங்கே?' மாகு + ஒத்து > மா - கொத்து 'எங்களுக்கு வேண்டாம்' ஒ. நோ. சிதம்பரநாத செட்டியார், (1992:586(b)). இவ்வொலியியல் கூற்றினை விளக்கவே தொல்காப்பியரால் அம் மூன்று விதிகளும் அமைக்கப்பெற்றன. மொழி மாற்றத்தால் பிணைப்பு என்ற ஒலியினியல் கூற வழக்கு ஒழிந்ததாலும் எழுத்துமுறை மாற்றத்தாலும் உரையாசிரியர் அவர் கால மொழியமைப்பிற்கு ஏற்பப் பொருள் கூறிச் சென்றனர். இங்கே தொல்காப்பியர் புள்ளி என்ற வரிவடிவக் கூறை ஓர் இலக்கணம் கூறும் உத்தியாகப் (descriptive technique) பயன்படுத்தி உள்ளார். (ஒ.நோ. பாலசுப்பிரமணியன் 1997: 38).

உ ஊகாரம் நவ்வொடு நவிலா ( தொல். எழுத்து. 74 )

என்ற நூற்பா "மொழியீற்றில் நு, நூ, வு, வூ ஆகியவை வரா" எனச் சொல்கிறது. ஆனால் இவ்விதிக்கு முரணாக இன்றைய தொல்காப்பியப் பதிப்புகளிலேயே கவவு (தொல் பொ. 171.3) தரவு (தொல் பொ. 438.1) செலவு (தொல் பொ. 175) ஆகியவை போன்ற பல வுகர ஈற்றுச் சொற்கள் வருகின்றன. உரையாசிரியரும் இவை போன்ற மேலும் பல வுகர ஈற்றுச் சொற்களை எடுத்துக்காட்டாகக் காட்டி (கதவு, துரவு, குவவு, புணர்வு) அவற்றை உரையினுள் அடக்குகின்றனர். (இராம. கோவிந்தசாமி பிள்ளை (நச்சினார்க்கினியம், 1967-81). மொழி வரலாற்று நோக்கில் பார்த்தால் உண்மை விளங்கும். இவை புகர ஈற்றுச் சொற்கள் வுகரமாக மாறியவை. ஏடு பெயர்த்து எழுதுவோரால் அவர் காலத் தமிழ் மரபை ஒட்டி மாற்றி எழுதப்பட்டவை. குமாரசாமி ராஜா (1974) "குற்றுகரமா? முற்றுகரமா?" என்ற கட்டுரையில் இவ்வுகர ஈற்றுச் சொற்கள் குற்றியலுகர ஈற்றுச்சொற்கள் போலச் சந்தியில் புணர்வதை எடுத்துக்காட்டுகிறார். தொல்காப்பிய நூற்பாவிலேயே

செலவுறு கிளவியும் செலவழங்குகிளவியும் ( தொல். பொருள். 175-4 )

செலவு + உற > செலவுறு; செலவு + அழுங்கு > செலவழங்கு

என உகரங்கள் மேலே விளக்கப்பட்ட குற்றியலுகர ஈற்றுச் சொற்கள் போலப் புணர்ந்து உகரம் கெட்டு உயிரேற இடங்கொடுத்துள்ளன. வுகர ஈறாயின் முற்றுகரமாய் உடம்படுமெய் பெற வேண்டும். அவ்வாறன்றி உகரம் கெடுவதற்குக் காரணம். தொல்காப்பியர் காலத்தில் அவை புகர ஈற்றுச் சொற்கள். அவை அன்று கவபு, தரபு, செலபு எனவே வழங்கியிருக்க வேண்டும். மொழியிடை இரு உயிர்களுக்கிடையில் வரும் பகரம் வகரமாக மாறுவது ஒலி மாற்றம் (phonetic change). தொல்காப்பியப் பழைய படிகள் சிலவற்றில் புகர, வுகர ஈற்றுப் பாடவேறுபாடு காணப்படுவது இம்மாற்றத்தை உறுதி செய்யும் சான்றாகும். நூன்மரபு நூற்பா

புள்ளியில்லா எல்லா மெய்யும்
உருவுருவாக அகரமொ டுயிர்த்தலும்
ஏனை உயிரோ டுருவு திரிந்துயிர்த்தலும்
ஆயீரியில உயிர்த்த லாறே (தொல். எழுத்து. 17)

என்பதில் "உருவுருவாகி, உருவுதிரிந்து" என்பவற்றிற்கு "உருபுருவாகி, உருபு திரிந்து" என்ற பாடங்களும் உள்ளன (அடிகளாசிரியன் (இளம்பூரணம்) 1969: 42), இவை ஒலிமாற்றத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன. எனவே மேற்கூறிய இடங்களில் மட்டும் அன்றி தொல்காப்பியம் முழுவதையும் மொழி வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அணுகி, தொல்காப்பியர் காலத்துப் பழந்தமிழ் மொழியமைப்பை உட்கொண்டு பொருள் காணுதல் நூலாசிரியர் கருத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள அவசியமாகும்.

3. ஒருங்கிணைந்த அணுகுமுறை

மேல் முன்னுரையில் (0) இன்றைய ஆய்வாளர் தொல்காப்பியத்தை ஒரு முழுநூலாக ஆராயமல் பகுதிபகுதியாகப் பிரித்து எழுத்ததிகாரத்தையும் சொல் அதிகாரத்தையும் ஒரு பகுதியாகவும் பொருளதிகாரத்தை இன்னொரு பகுதியாகவும் ஆராய்வதாகக் கூறினேன். அவை பிளவுபட்ட அல்லது பிரித்து நோக்கும் ஆய்வுகள். அதற்குக் காரணம் உலக இலக்கண மரபுகள் அனைத்திலும் இலக்கணம், வியாகரணம் grammar என்ற தலைப்பின் கீழ் ஆராயப்படும் செய்திகள் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்ற இரு அதிகாரங்களுக்குள்ளேயே ஆராயப்பட்டு, பொருளதிகாரத்தில் அவற்றிற்குத் தொடர்பற்றவை போலத் தோன்றும் வேறு செய்திகள் ஆராயப்படுவதே.

ஒரு நூலில் அடிப்படையான பொருண்மை (subject) யிலிருந்து வேறுபடுவன போன்ற சில செய்திகள் கூறப்பட்டிருப்பின் அந்த நூல் அடிப்படைப் பொருளை அன்றி இரண்டாவது பொருளையே பேசுவதாகக் கருதி ஆராய்வது பொருத்தமற்றதாகும். அந்த இரண்டாவது பொருள் அடிப்படைப் பொருளோடு எந்த வகையிலாவது தொடர்பு கொண்டதா என்பதையும் காணவேண்டும். இன்றைய அறிவியல் ஆய்வுகள் அனைத்தும் உலக இயற்கையிலும் சமுதாயத்திலும் காணப்படும் அனைத்துப் பொருண்மைகளும் ( phenomena ) ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையவை என்பதைக் காட்டுகின்றன; எனவேதான், உயிரியலும், வேதியியலும் இணைந்த உயிர் வேதியியல் (bio-chemistry) போன்ற அறிவியல் துறைகளும், சமுதாய உளவியல் (social-psychology), சமுதாய மொழியியல் (socio-linguistics) போன்ற துறைகளும் இன்று வளர்ச்சியடைந்துள்ளன. அடிப்படைப் பொருண்மைக்கும் சார்புப் பொருண்மைக்கும் உரிய செய்திகள் பேசப்படுவதாலேயே அது சார்புப் பொருண்மையை ஆராயும் நூல் என முடிவு செய்தல் கூடாது. இவ்வடிப்படையில், செய்யுள் அமைப்பு, உவமையாகிய அணி பற்றிய செய்திகள், வடமொழி ரசக் கோட்பாட்டுடன் ஒப்பிடக்கூடிய மெய்ப்பாடு ஆகியவை பொருளதிகாரத்தில் பேசப்படுவதால் அது இலக்கியவியல்பற்றி ஆராய்வதாகக் கொள்வது பொருத்தமற்றதாகும். இச்செய்திகள் மொழி அமைப்புடன் கொண்டுள்ள தொடர்பைப் புரிந்து கொண்டு மூன்று அதிகாரங்களையும் ஒரே நூலாகவே தொல்காப்பியர் செய்து உள்ளதால், அவருடைய நோக்கம் "வடவேங்கடம் தென்குமரி" ஆயிடை நிலத்து "வழக்கும் செய்யுளுமாய்" அமைந்த தமிழ் மொழி அமைப்பை ஆராய்வதே எனக்கொண்டு ஆராய வேண்டும். இன்னொரு வகையாகச் சொன்னால் இது ஓர் ஒருங்கிணைந்த ஆய்வுமுறை (integrated approach) ஓர் அமைவொழுங்கை (system) துணை ஒழுங்கமைவுகளாகப் (sub◌systems) பகுத்து ஆராய்வது வசதிக்காகவே. அந்தத் துணை ஒழுங்கமைவுகள் தமக்கு உரிய தனித் தன்மைகளைக் கொண்டிருப்பினும் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் ஒன்றை ஒன்று சார்ந்துமே செயல்படுகின்றன. எனவே, தொல்காப்பியர் மொழியின் துணை ஒழுங்கமைவுகளாக வகுத்த எழுத்து, சொல், பொருள் என்ற மூன்றும் ஒருங்கிணைந்து செயல்படும் ஒரு முற்றொழுங்கமைவு எனக் கருதியே நூல் வகுத்துள்ளார். இந்த அடிப்படையிலேயே தொல்காப்பிய ஆய்வின் அணுகுமுறை அமைய வேண்டும்.

அவ்வாறு அமைந்த ஒருங்கிணைந்த அணுகுமுறையில் தொல்காப்பியத்தை முற்று நூலாகக் கொண்டு ஆராய்ந்தால் மேற் (1) கூறியதுபோலப் பொருளதிகாரச் செய்திகள் வழக்கும் செய்யுளுமாய் அமைந்த பழந்தமிழனின் பொருள் ஒழுங்கமைவுகளே (Semantic system); அகமும், புறமுமாய்ப் பேசப்படும் செய்திகள் உலக வழக்கின் நிகழ் பொருளாயும் செய்யுளின் பாடுபொருளாயும் அமைவது. வழக்கும் (பேச்சு) செய்யுளும் பழந்தமிழின் பயன்பாட்டுக் களங்கள் என்பதாலேயே என்பதும் பொருளதிகாரச் செய்திகளை மட்டும் தனித்துப் பார்ப்பது சரியான அணுகுமுறை அல்ல என்பதும் புலனாகும்.

4. அகநோக்கு

ஒரு நூலைப் பிற மரபுகளின் அடிப்படையில் ஆய்வது புறநோக்காகும் (External approach). அந்த நோக்கு அந்நூலாசிரியரின் உண்மையான ஆய்வு நோக்கத்தையும் அவர் கூறும் செய்திகளையும் அறிந்துகொள்வதற்குத் தடையாகும். இதுவரை வந்துள்ள தொல்காப்பிய ஆய்வுகள் பலவும் புறநோக்கில் அமைந்தனவாகவே உள்ளன.

சொல்லதிகாரம் வேற்றுமை மயங்கியலில் வரும்

வினையே செய்வது செயப்படு பொருளே
நிலனே காலம் கருவி என்றா
இன்னதற்கு இது பயனாக என்னும்
அன்ன மரபின் இரண்டொடும் தொகைஇ
ஆயெட்டென்ப தொழில் முதல் நிலையே ( தொல். சொல். 112 )

என்ற நூற்பா வினைச்சொல் இலக்கணம் உணர்த்துவதாக இளம்பூரணர், கல்லாடனார் ஆகியோரும் எழுவகை வேற்றுமையினும் காரக வேற்றுமை பேசுவதாகத் தெய்வச்சிலையாரும் தொழிலின் காரணம் அல்லது காரகத்தைப் பேசுவதாகச் சேனாவரையரும் வேற்றுமைப் பொருள்கள் தோன்றும் இடம் கூறுவதாக நச்சினியார்க்கினியரும் உரை கூறுகின்றனர் (ஆபிரகாம் அருளப்பன், வி. ஐ. சுப்பிரமணியம், 1963 : 492-499).

இந்நூற்பா தொல்காப்பியரின் வாக்கிய அமைப்புக் கொள்கையைப் புரிந்துகொள்ள அடிப்படையாய் அமையும் நூற்பா (ஒ. நோ. பாலசுப்பிரமணியன், 2001: 65◌82). வினைப் பயனிலை வாக்கியத்தில் வரக்கூடிய அடிப்படைப் பொருள் நிலைகளை (semantic primes) விளக்குபவை. மேம்போக்காக நோக்கும் பொழுது வடமொழிப் பாணினீயத்தில் பேசப்படும் காரகக் கொள்கையோடு சில ஒப்புமைகளைக் கொண்டவை. அதனோடு ஒப்பிட்டே உரையாசிரியர்களான தெய்வச் சிலையாரும், சேனாவரையரும் காரக வேற்றுமை அல்லது தொழிலின் காரணம் அல்லது காரகம் பற்றிப் பேசுவதாகக் கூறுகின்றனர். ஆனால் பாணினியின் காரகங்கள் வினைப் பயனிலை வாக்கியத்தில் அமையும் பெயர்த்தொடர்களின் தொடர்நிலை (syntactic) உறவுகளையே குறிப்பன. வினையை அவற்றுள் ஒன்றாகச் சேர்ப்பது வடமொழி மரபிற்குப் பொருந்தாத ஒன்று. இதை அறிந்துள்ள சேனாவரையர் "அஃதேல், தொழிலின் வேறாயது காரகமாகலின், வனைதற்றொழிற்கு அத்தொழில்தான் காரகமாமாறு என்னையெனின், வனைந்தான் என்பது வனைதலைச் செய்தான் என்னும் பொருட்டாகலின், செய்தற்கு வனைதல் செயப்படும் பொருள் நீர்மைத்தாய்க் காரகமாம் என்பது" (ஆபிரகாம் அருளப்பள், வி. ஐ. சுப்பிரமணியம் 1963: 494, 495). என்று விளக்குகின்றார். நச்சினார்க்கினியாரும் இதே போன்ற விளக்கம் கூறி "வினையும் தொழிலும் வேறு" என்ற விளக்கமும் கூறுகிறார் (ப. 496). இவ்விளக்கங்கள் அனைத்தும் தொல்காப்பியர் கருத்தை வடமொழி இலக்கணக் கொள்கை அடிப்படையில் விளக்க முயல்வதால் வரும் சிக்கல்களே. அவ்வாறன்றி அகநோக்கில் தொல்காப்பியரின் வாக்கிய அமைப்புக் கொள்கை, வேற்றுமை இலக்கணக் கொள்கை என்ன என்று அவர் நூலையே அடிப்படையாகக் கொண்டு ஆராய்வது சரியானதாகும். தொல்காப்பியரின் வாக்கிய அமைப்புக் கொள்கை (Tolkappiyar’s concept of sentence structure) என்ற கட்டுரை (பாலசுப்பிரமணியன், 2001) தெளிவாக விளக்குகிறது. தொல்காப்பியத்தைப் பாணினி எழுதிய அஷ்ட்டாத்தியாயீயையும் ஒப்பிட்டுத் (பாலசுப்பிரமணியன், 1978, 2001: 101-113) தொல்காப்பியரின் வேற்றுமைக் கொள்கை எவ்வாறு பாணினியின் காரகக்கொள்கையுடன் வேறுபடுகிறது என்பது காட்டப்பட்டுள்ளது. மேற்கூறிய வேற்றுமை மயங்கியல் நூற்பாவின் சிறப்பை அகநோக்கில் சுருக்கமாக இங்கே காணலாம்.

தொல்காப்பியர், சொல்லிலக்கணத்தை அல்லது சொல் எனப்படும் பொருளுடைய உருபன்களை அடிப்படை அலகுகளாகக் கொண்ட வாக்கிய அல்லது தொடர் இலக்கணத்தை வேற்றுமையின் அடிப்படையில் விளக்குகிறார். இவ்வடிப்படை எழுத்ததிகாரத் திலும் மேற்கொள்ளப்பட்டு புணர்ச்சி, அல்வழி, வேற்றுமை எனப் பிரிக்கப்படுகிறது. அதனாலேயே சொல்லதிகாரத்தில் மூன்று இயல்கள் வேற்றுமைக்காக ஒதுக்கியுள்ளார். கிளவியாக்கம் என்னும் முதல் இயலுள் திணை, பால் பாகுபாடு, வாக்கியத்துள் எழுவாய், பயனிலை இயைபு (concord), வழு, வழுவமைதி, வினா, விடை போன்ற தொடரின் பொதுவிலக்கணங்கள் பேசி, வேற்றுமையியல், வேற்றுமைமயங்கியல், விளிமரபு ஆகிய மூன்று இயல்களில் வேற்றுமை அடிப்படையில் வாக்கிய அமைப்பைப் புறநிலை (Surface structure) அல்லது வேற்றுமை வடிவத்தின் (Case form) அடிப்படையிலும் புதைநிலை (Deep structure) அல்லது வேற்றுமைப் பொருள் (Case meaning) அடிப்படையிலும் விளக்குகிறார். வேற்றுமையியலில், வேற்றுமை வடிவின் அடிப்படையில் ஏழு புறநிலை வேற்றுமைகள் வகுக்கப்பட்டு அவற்றின் பொருண்மை, வாக்கியத்தில் அவற்றின் பங்கு ஆகியன விளக்கப்படுகின்றன. இவ்வியலில் பெயர்ப் பயனிலை வாக்கியங்கள், வினைப்பயனிலை வாக்கியங்கள் இரண்டும் பொதுவாக ஆராயப்படுகின்றன. ஆறாம் வேற்றுமையில் வரும் பெயர்த்தொடர்களும் ஆராயப் படுகின்றன. வேற்றுமை மயங்கியலில் வேற்றுமைத்தொடர் ஒன்றுடன் ஒன்று இணைந்து வருதல் (co-occurrence), ஒன்றின் இடத்தில் ஒன்று வருதல், அவற்றின் பல்வகைப்பொருள் வேறுபாடுகள் போன்றவை ஆராயப்படுகின்றன. வேற்றுமையியலில் எழுவாய் வேற்றுமை பேசப்படும்பொழுது பெயர்ப்பயனிலை வாக்கியத்தின் அமைப்பும் பொருளும்

பொருண்மை சுட்டல் வியங்கொளவருதல்
வினைநிலை உரைத்தல் வினாவிற்கேற்றல்
பண்புகொளவருதல் பெயர்கொளவருதல்
அன்றி அனைத்தும் பெயர்ப்பயனிலையே ( தொல். சொல். 67 )

என்ற நூற்பாவில் விளக்கப்படுகிறது. வினைப்பயனிலை வாக்கியத்தில் வரும் வேற்றுமைத் தொடர்களின் அமைப்பும் அவற்றின் வேறுபாடும் விளக்கப்படவில்லை. அதுவே மேல்காட்டிய "வினையே செய்வது (தொல். சொல். 112)" என்ற வேற்றுமை மயங்கியல் நூற்பாவில் விளக்கப்பட்டுவிடுகிறது. வினை அடிப்படையாய் அமையும் வாக்கியத்தில் அமையக்கூடிய அடிப்படைப் பொருண்மை நிலைகள் (Semantic primes) வினை, செய்வது அல்லது கருத்தா (Agent), செயப்படுபொருள் (Object or Patient), நிலன் (Place or Location), காலம் (Time), கருவி (Instrument), 'இன்னதற்கு’ (For the purpose of or Benefective), ‘இதுபயன் ஆக’ (Resultative) ஆகிய எட்டு. இது வினைப்பயனிலை வாக்கியத்தின் வினையையும் உட்கொண்ட பொருண்மை நிலையிலான முற்றமைப்பைக் காட்டுகிறது. வாக்கிய அமைப்பை மொழியியலார் ஆக்கக்கூறுநிலை (Constituency) அல்லது சார்புநிலை (Dependency) ஆகிய இருவகைகளில் ஒன்றால் விளக்குவர். ஆக்கக்கூறு நிலையில் வாக்கியம் (S) அதன் பகுதிகளாகப் (Constituent) பிரிபடும்.

S > NP + VP

வாக்கியம் > பெயர்த்தொடர் + வினைத் தொடர்

ஆனால் சார்புநிலை வாக்கிய அமைப்பில் ஒரு அடிப்படைப் பகுதியை மற்ற பகுதிகள் சார்ந்து அமையும். அம்முறையில் வினைப்பயனிலை வாக்கியங்கள் வினையிலிருந்தே பிரிபடுவனவாகக் காட்டப்படும்.

V > V (Verb வினை) + A (Agent கருத்தா) + P (Patient செயப்படுபொருள்) + I (Instrument, கருவி)

V V A P I ...

தொல்காப்பியர் இச்சார்பு நிலையைப் பின்பற்றியே வினையடிப்படை ("தொழில் முதனிலை") பொருள் நிலைகளில் வினையையும் ஒன்றாகக் காட்டுகிறார். வினையும் மற்ற கருத்தா, செயப்படுபொருள், நிலன், காலம், கருவி, இன்னதற்கு, இது பயன் ஆக என்ற எட்டுமே வாக்கியத்தின் பகுதிகள். இது தொல்காப்பிய நூற்பாவை அடிப்படையாகக் கொண்ட அகநோக்கில் அமையும் விளக்கம். வடமொழி மரபின் அடிப்படையில் காரகம் எனக் கொண்டால் வினையை வடமொழி (இலக்கண நூலார்) காரகமாகக் கொள்வதில்லை. ஆதலால் அதனையும் தொல்காப்பியர் உட்கொண்டதை உரையாசிரியரால் விளக்க இயலவில்லை. எனவே "வனைந்தான் என்பது வனைதலைச் செய்தான் எனச் செய்தற்கு வனைதல் செயப்படுபொருள் நீர்மைத்தாய்க் காரகமாம்" எனச் சேனாவரையர் விளக்கம் கூறுகிறார். செயப்படுபொருளை ஒரு 'காரகமாக'க் கருதிய பின் வினை என மீண்டும் கூறுவதற்கு இது விளக்கம் அளிக்கவில்லை. ஒரே பொருண்மைக்கு இரு காரகம் கூறுவது போல அமைகிறது. எனவே, இந்நூற்பா பேசுவது காரகம் என்ற விளக்கம் பொருத்தமானதல்ல என்பது புலனாகும். பாணினியின் காரகக் கொள்கையும் தொழில் முதல்நிலையும் முற்றிலும் வேறுபட்டவை என்பதை தொல்காப்பியப் பாணினீய ஒப்பாய்வுக் கட்டுரை விளக்கியுள்ளமை மேலே கூறப்பட்டது.

இவ்வாறே இதுவரை வந்துள்ள பொருளதிகார ஆய்வுகள் அனைத்தும் புறநோக்கில் அமைந்தவையாகவே உள்ளன. பொருளதிகாரத்தை எழுத்து சொல்லிலிருந்து பிளவுபட்ட பார்வையில் பிரித்தது மட்டுமன்றி அவ்வதிகாரச் செய்திகளையும் பகுதிபகுதியாக நோக்கி இலக்கியத்தின் பாடுபொருள், ரசக் கோட்பாடு, அணி, யாப்பு பேசுவதாக ஆராய்கின்றன. இதற்குக் காரணம் வடமொழி மரபு. மேனாட்டு மரபு இவற்றின் தாக்கமே. ஆனால் அகநோக்கு அணுகுமுறை தொல்காப்பியம் முழுவதிலும் பொருள் அதிகாரத்திலும் பேசப்படும் செய்திகளுக்கே முதன்மை அளித்து, பல்வேறு துறைகளுக்கு உரியனபோலப் புறநோக்கில் தோன்றும் செய்திகள் தொல்காப்பியரால் நூலின் பகுதியாகவும் ஓர் அதிகாரத்தின் பகுதியாகவும் கூறப்பட்டதற்குத் தக்க காரணங்கள் இருக்க வேண்டும் எனக் கொண்டு அவற்றை நூலிலிருந்தே கண்டறிய வேண்டும். இவ்வணுகுமுறைப்படி பொருளதிகாரம் பேசுவது மொழியின் பொருளமைப்பே என மேலே (3) கூறப்பட்டது அடுத்த பகுதியில் (5) விளக்கப்படும்.

5. தொல்காப்பிய அமைப்புத் தருக்க முறை

ஒரு நூல் கூறும் செய்திகளின் கொள்கைப் பின்னணியைப் புரிந்து கொள்ள அந்நூலின் அமைப்புத் தருக்க முறையும் (Organizational logic) கூர்ந்து ஆராயப்பட வேண்டும். முக்கியமாக ஒரு மொழி அமைப்பைப் பேசும் இலக்கண நூலின் அதிகாரப்பகுப்பு, இயல்பகுப்பு, இயல்களின் வரிசை அமைப்பு, அதிகாரங்கள் இயல்களுக்கு இடையே உள்ள பொருள் தொடர்பு ஆகியவை அவ்விலக்கண நூலின் மொழி பற்றிய கொள்கைப் பின்னணியை ஒட்டியும் இலக்கணம் கூறும் முறையின் (Technique of description) அடிப்படையிலும் அமைகின்றன. இன்றைய மொழியியல் வளர்ச்சியிலும் தொடக்ககால அமைப்பியல் மொழியியல் மொழி அமைப்பை ஒலியியல் (Phonetics), ஒலியனியல் (Phonemics), உருபொலியனியல் (Morphophonemics), உருபனியல் (Morphology) தொடரியல் (Syntax), பொருண்மையியல் (Semantics) என்ற பகுதிகளை உடையதாக ஆராய்ந்தது (Hockett. 1958). பின்னர் வந்த மாற்றிலக்கண மொழியியல் மொழியின் இலக்கணம் தொடரியற்பகுதி (Syntactic component) என்ற முக்கியப் பகுதியையும் அதன் விளக்கப் பகுதிகளான (Interpretive components) ஒலியனியல் பகுதி (Phonological component), பொருண்மையியல் பகுதி (Semantic component) ஆகியவற்றையும் கொண்டதாகக் காண்கிறது (Chomsky, 1965). இந்த முறையில் ஒலியியல், ஒலியனியல், உருபொலியனியல் செய்திகள் ஒலியனியலின் உள்ளும்; உருபனியல் செய்திகள், தொடரியலின் உள்ளும் அடங்கும். மாற்றிலக்கண முறையை உருவாக்கிய சாம்ஸ்கியே அவாய் நிலைக் கட்டுப்பாட்டுக் கொள்கை (Government and Binding), குறைநிலைத் திட்டம் (Minimalist programme) ஆகிய புதிய கொள்கைவரைவுகளை உருவாக்கியுள்ளார். கொள்கைப் பின்னணி மாறும்பொழுது மொழியின் இலக்கண அமைப்பும் மாறும். எனவே தொல்காப்பியத்தின் மொழியமைப்புக் கொள்கையையும், தொல்காப்பியம் பேசும் செய்திகளின் தன்மை, சிறப்பு ஆகியவற்றையும் புரிந்துகொள்ள, தொல்காப்பிய அதிகாரங்களின் இயலமைப்பின் அமைப்புத் தருக்கமுறையைப் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வடிப்படையிலேயே, அவ்வமைப்புத் தருக்க முறைக்கு மாறுகொள்ளாமலேயே, தொல்காப்பியம் பேசும் செய்திகள் விளக்கப்பட வேண்டும். அவ்வாறன்றிப் பிற மரபுகளின் அடிப்படையில் தொல்காப்பியச் செய்திகளுக்கு விளக்கம் அளிக்கும்பொழுது அது தொல்காப்பியத்தின் அமைப்புத் தருக்க முறையோடு மாறுபட்டு அமைவதைக் காணலாம். அது வலிந்து பொருள் கொள்வதாகவே அமையும்.

தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களும் ஒவ்வொன்றும் ஒன்பது இயல்களை உடையனவாக வகுக்கப்பட்டுள. இவ்வதிகாரங்களின் இயல்பகுப்பு, வரிசை முறை, அவற்றில் கூறப்படும் செய்திகள் தொல்காப்பியத்தின் மொழிக் கொள்கைப் பின்னணி, அவர் இலக்கணம் கூறும் முறை, இவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளன. இவற்றுள் எழுத்ததிகார அமைப்புத் தருக்க முறை (பாலசுப்பிரமணியன், 1987) நன்கு விளக்கப்பட்டுள்ளது. எழுத்ததிகாரத்தில் முதல் இயலான நூன்மரபின் இடத்தையும் சிறப்பையும் அது மூன்று அதிகாரங்களாய் அமைந்த தொல்காப்பியம் முழுமைக்கும் பொதுவானது என்பதும் (பாலசுப்பிரமணியன், 1984) தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. சொல்லதிகார இயல்கள் பகுப்பும் வரிசை முறையும் மற்ற பிற்கால இலக்கண நூல்களிலிருந்து வேறுபட்டிருப்பது தொல்காப்பியரின் இலக்கணக் கொள்கைப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டது. சொல்லதிகாரம் எனப் பெயரிட்டிருப்பினும் நன்னூலார்போலச் சொல்லின் பொது இலக்கணம், சொல் வகைப்பாடு, சொல் வகைகளின் சிறப்பிலக்கணம் என இயல் பகுக்காது கிளவியாக்கத்தில் வாக்கிய அமைப்பிற்கு உரிய பல செய்திகளைப் பேசி, பெயரிலக்கணம் பேசுமுன் பெயர் ஏற்கும் வேற்றுமை இலக்கணத்தை மூன்று இயல்களில் பேசி, பின்னர் பெயரியல், வினையியல், இடையியல், உரியியல் செய்திகளைப் பேசுவதும் எஞ்சிய பொதுவிலக்கணம் எச்சவியலில் பேசுவதும் உட்கொள்ளத்தக்கது. சொல்லதிகாரம் தனிச்சொல் இலக்கணம் பேசாது வாக்கிய அமைப்பைப் பேசும் தொடரியலுக்கே சிறப்பிடம் கொடுக்கும் இலக்கணம். தொடர் அமைப்பையும் எழுவாய் (Subject), பயனிலை (Predicate) என்ற அடிப்படையில் மேனாட்டினர்போலப் பிரித்து ஆராயாமல் வாக்கியத்தில் அமையும் வேற்றுமைகளின் அடிப்படையில் ஆராய்கிறது. எனவேதான் வேற்றுமைக்குச் சிறப்பிடம் கொடுத்து மூன்று இயல்களில் பேசுகிறது. வேற்றுமை அடிப்படையில் வாக்கிய அமைப்பை அதன் புறநிலை, பொருண்மை நிலைகளில் ஆராயும் முறையைப் பாலசுப்பிரமணியன் (1978, 2001) கட்டுரைகளில் விளக்கியுள்ளமையைமுன்பகுதியில் கண்டோம். பின் வினையியலும் பெயரெச்ச இலக்கணம் பேசும்பொழுது தொழில் முதனிலைகள் எனும் பொருண்மை நிலைகள் அடைப்படையில் விளக்குகிறார் (தொல். சொல். 234). வேற்றுமை இலக்கணம் அவர் மொழிக்கொள்கையின் அடிப்படை என்பது எழுத்ததிகாரத்தில் புணர்ச்சியை வேற்றுமை குறித்த புணர் மொழிநிலை, வேற்றுமையல்வழிப் புணர்மொழி நிலை (தொல். எழுத்து. 113) எனப் பிரித்து விளக்குவதாலும் அறியலாம். எனவே தொல்காப்பியத்தைத் தொடரியல் பேசும் இலக்கணமாக அதிலும் வேற்றுமை இலக்கணமாக (Case grammar) காணாமல் சொல்வகை அடிப்படை இலக்கணமாக வடமொழி மரபைப் பின்பற்றி உரையாசிரியருள் தெய்வச்சிலையார் தவிர மற்றவர் விளக்குவது அவர் நூலின் அமைப்புத் தருக்கமுறையோடு மாறுபடுகிறது.

பொருளதிகாரத்தின் முன்பகுதி இலக்கியத்தின் பாடுபொருள், ரசக் கோட்பாடு, அணியிலக்கணம், யாப்பிலக்கணம் எனப் பல்வகைப்பட்ட செய்திகளைக் கூறும் பகுதி; அது பேசும் செய்திகள் இலக்கியம் பற்றிய செய்திகளே; மொழி அமைப்புப்பற்றியவை அல்ல என்று நம் நாட்டு, மேனாட்டு அறிஞர்கள் கூறியுள்ளதைக் கண்டோம். பகுதி (1) இல் அறிவியல், வரலாற்றுக் கண்ணோட்டத்தில் தொல்காப்பியச் செய்தி அனைத்தும் மொழியமைப்புப்பற்றியனவாகவே ஆராயப்பட வேண்டும்; அண்மைக்காலத்திய எனது ஆய்வுகளின் அடிப்படையில் (பாலசுப்பிரமணியன், 1998, 1999, 2000, 2001) பொருளதிகாரம் பேசுவது பழந்தமிழ் மொழியின் பொருண்மை அமைப்பே; மெய்ப்பாட்டியல், உவமவியல், மரபியல் செய்திகளும் பொருண்மை அமைப்பிற்கு உரியனவே; செய்யுளில் மட்டுமே இலக்கிய அமைப்பைப் பேசுவது எனக் கூறினேன். பொருளதிகார இயல்கள் பேசும் செய்திகளின் அமைப்புத் தருக்கமுறை அடிப்படையில் பார்க்கையில் அது பல்வேறு செய்திகளைப் பேசுவதாகக் கொள்வது பொருத்தமற்றது; பொருண்மை அமைப்பின் பல்வகைக் கூறுகளையே பொருளதிகாரம் பேசுகிறது என்பது புலனாகும். இங்கே பேசுப்படுவது சொற்பொருண்மை அல்ல; அது உரியியலில் பேசப்பட்டுவிடுகிறது. உலகப் பொருண்மை மொழிக்கு மொழி மாறுபட்டு அமையும் மொழிப் பொருண்மையின் முற்றமைப்பே. என் முந்தைய ஆய்வில் (பாலசுப்பிரமணியன், 1998, 1999, 2000, 2001) கூறப்பட்ட கருத்துக்கள் இங்கே சுருக்கமாக விளக்கப்படும். பொருளதிகாரம் இலக்கியக் கோட்பாடு பேசும் நூலாயின் அது இலக்கியத்தின் அமைப்பு, இலக்கிய வகைகள், இலக்கியத்தின் வடிவக் கூறுகள், இலக்கிய உத்திகள், இலக்கியத்தின் பாடுபொருள் (Theme) என்ற வரிசையில் செய்திகளைக் கூற வேண்டும். அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் என்ற ஐந்து இயல்களில் பாடுபொருள்பற்றிப் பேசி, மெய்ப்பாட்டியலில் ரசக்கோட்பாடுடன் ஒப்பிடத்தக்க எண்வகை மெய்ப்பாடுகளையும் வேறு பல செய்திகளையும் கூறி, பின் அணியியல் எனத்தக்க உவமையியல் பேசி, அதை அடுத்துச் செய்யுளியலில் செய்யுள் அல்லது ஆக்கப்பட்ட மொழிவகையின் (Composition) உறுப்புகளாக, வடிவமைப்பு, பொருளமைப்புக் கூறுகள், செய்யுள் வகைகள் அனைத்தையும் பேசி, பின் இவற்றோடு எவ்வகையிலும் தொடர்பற்றது போலக் காணப்படும் மரபியல் பேசுவது இலக்கியவியல் ஆய்வுக்கு எவ்வகையிலும் பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை. பொருளதிகாரத்தை இலக்கியவியல் பேசுவது எனக் கூறும் ஆய்வு எவ்வகையிலும் பொருள் தொடர்பு அற்ற ஒரு முறையைப் பின்பற்றித் தொல்காப்பியர் நூல் செய்தார் என்று கொள்ளவைக்கிறது. ஆனால் பொருளதிகாரம் ஆய்வது பொருண்மையியல் செய்திகளே எனக்கொண்டு நோக்கும்போது பொருளதிகார இயலமைப்பு பொருத்தம் உடையதாகவும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையதாகவும் அமைகிறது. அது பின்வருமாறு அமையும்.

அகத்திணையியல் முதல் பொருளியல் வரையிலான ஐந்து இயல்கள் வழக்கிற்கும் செய்யுளுக்கும் உரிய கருத்துப் பொருண்மை ஒழுங்கமைவை விளக்குகின்றன. இவற்றுள்ளும் அகத்திணையியல், பொருளியல் ஒருவகை அமைப்பு முறையையும் களவியல், கற்பியல் இன்னொரு வகை அமைப்பையும் உடையன. அகத்திணையியல் கூறும் அகப்பொருட் கொள்கையைப் பகுப்பாய்வு செய்து, அது பாடலுள் பயின்று வழங்கும் முறையையும் உட்கொண்டு திணை, முதல், கரு, உரி போன்ற அகப்பொருண்மையின் கருத்து வகைகள் (Conceptual categories), தலைவன், தலைவி, தோழி, நற்றாய், கண்டோர் போன்ற பொருண்மை நிகழ்த்துவதற்குரிய மாந்தர், அவர்க்குரிய மொழி நிகழ்வுச் சூழல் அல்லது சுற்றுச்சூழல் வகைகள், அவர்கள் செயல்பாட்டில் உள்ள வரையறை அல்லது கட்டுப்பாடுகள் (எ◌டு: "முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை" தொல். பொருள். 37), இப்பொருண்மை வகைப்பாட்டை உணர்வதற்குத் துணைபுரியும் மொழிக் கருவியாகிய உவமை, அதன் வகைகள், செய்யுளில் எவ்வகைகளில் இப்பொருண்மை சிறப்பாகப் பேசப்படுகிறது முதலான செய்திகளைப் பேசுகிறது. இவையனைத்தும் அகப்பொருள் கொள்கையாக்கத்திற்கு (Theorization) உரியவை. பொருளியலும் இவ்வாறே களவியல், கற்பியலையும் உட்கொண்டு கொள்கையாக்கம், கொள்கை வரையறைக்கூறுகளைச் சொல்கிறது.

ஆனால், களவியல், கற்பியல் வேறுபட்ட அமைப்பைக் கொண்டவை. தலைவன், தலைவி இருவர் அக வாழ்வில் களவு, கற்பு ஆகிய இரு பகுதிகளின் நிகழ்வுகள், அவற்றின் வரைவிலக்கணம், நிகழ்வரிசை (Sequence), நிகழ் சூழல் (Conditions), கூற்று நிகழ்சூழல், நிகழ்காலம் (இரவுக்குறி, பகற்குறி), நிகழ்இடம் (மனையகம், சிறைப்புறம்) மற்ற இவற்றுடன் தொடர்புடைய செய்திகள் கருத்துக் கூறுகளாக (Conceptual units) வரிசைப்படுத்திக் கூறப்படுகின்றன. இவ்விரு இயல்களில் பகுப்பாய்வோ கொள்கை ஆக்கமோ இல்லை. ஆனால் அகத்திணை இயலில் பகுப்பாய்வு செய்து வகுக்கப்பட்ட கருத்து வகைகளான திணை, முதல், கரு, உரி ஆகியவை இவ்விரு இயல் செய்திகளுக்கும் உரியவை.

புறத்திணையியல் வேறொரு வகை அமைப்பினை உடையது. பகுப்பாய்வு செய்ததின் அடிப்படையில் திணை வகுக்கப்பட்டு, அவற்றின் வரைவிலக்கணம் முதலில் பேசப்பட்டு அகத்திணைகளோடு கருத்து நிலையில் ஒப்பிடப்பட்டு, ஒவ்வொரு திணைக்குரிய நிகழ்வு வரிசைகளாகிய கருத்துக் கூறுகள் துறைகளாகப் பேசப்படுகின்றன. பல்வகைப் பொருட்கூறுகள் வாகையிலும், பாடாண் திணையிலும் பேசப்படுவன தமிழ்ப் புறப்பொருண்மையின் கருத்தாக்க முறையைக் காட்டுகின்றன.

மெய்ப்பாட்டியல் பேசுவது மேல் ஐந்து இயல்களில் ஆராயப்பட்ட அகப், புறப் பொருண்மையின் நிகழ்வுக் கூறுகளுக்குத் (Events) தொடர்புடைய மன, உடலியல் கூறுகள் (Psycho◌physical aspects). இவை செய்யுள் அல்லது இலக்கியத்தின் ரசக் கோட்பாடுகள் (Poetic sentiments) மட்டுமல்ல என்பது, தொல்காப்பியர் நகை முதலாகிய எட்டுவகை மெய்ப்பாடுகளை 11 நூற்பாக்களில் 22 வரிகளில் பேசி, பின்னர், அவற்றிலிருந்து வேறுபட்ட "உடைமை, இன்புறல்" போன்ற பலவற்றை 10 நூற்பாக்களில் 68 வரிகளில் ஆராய்வதிலிருந்து புலனாகும். உடைமை, இன்புறல், நடுநிலை, அருளல் போன்ற நுண்ணுணர்வுகளும், புகுமுகம் புரிதல், பொறிநுதல் வியர்த்தல் போன்ற அகப் பொருண்மையைக் காட்டும் செய்கைகளும் நிகழ்வுகளும் இன்பத்தை வெறுத்தல், துன்பத்துப்புலம்பல் போன்ற மனநிலைகளும் இவற்றுள் பேசப்படுகின்றன. நகை முதலிய எட்டும் பிறவும் அகப், புறப் பொருண்மையின் உணர்ச்சி, செய்கைக் கூறுகளே தவிர இலக்கியத்திற்கு உரியவை மாத்திரம் அல்ல. இத்தொடர்பை உரையாசிரியர் உணர்ந்திருந்தனர்.

"மேலை ஓத்துக்களுள் கூறப்படும் ஒழுகலாற்றுக்கும் "காட்டலாகாப் பொருள்" (தொல். பொருள். 243) என்பனவற்றிற்கும் எல்லாம் பொதுவாகிய மனக்குறிப்பு இவையாதலின் இவற்றை வேறுகொண்டு ஓரினமாக்கி மெய்ப்பாட்டியலென வேறொர் ஓத்தாக வைத்தமையானே எல்லாவற்றோடும் இயைபுடைத்து" என்று பேராசிரியர் கூறுவதன் மூலம் இதனை அறியலாம்.

அடுத்து, உவமவியல் ஆராய்வது தொல்காப்பியர் கண்ணோட்டத்தில் இலக்கியத்திற்கு அழகு சேர்க்கும் அணி அல்ல; மொழிப் பொருண்மையை உணர்த்துவதற்குப் பயன்படும் ஒரு கருவியே என்பது தொல்காப்பியர் உவமையை முதற்கண் அகத்திணையியலிலேயே அறிமுகப்படுத்தி, வகை கூறி அது வருமாற்றை விளக்குவதிலிருந்தே அறியலாம்.


உள்ளுறை உவமை ஏனை உவமம் எனத்
தள்ளாதாகும் திணை உணர்வகையே - தொல். பொருள். 49
உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலம் எனக்
கொள்ளும் என்ப குறி அறிந்தோரே - தொல். பொருள். 50
உள்ளுறுத்து இதனோடு ஒத்துப்பொருள் முடிகென
உள்ளுறுத் துரைப்பதே உள்ளுறை உவமம் - தொல். பொருள். 51
ஏனை உவமம் தான் உணர்வகைத்தே - தொல். பொருள். 52

என்பன உவமம் பொருண்மை உணர்த்தும் கருவியே என்பதைப் புலப்படுத்தும். பொருளியலிலும் மூன்று நூற்பாக்களில் (238 - 240) உள்ளுறைபற்றிப் பேசுகிறார். மேலும் உவமவியலிலும் உவமத்தின் இயல்பு, உவமை உருபுகள் ஆகியவற்றைப் (தொல். பொருள். 272 ◌296) பேசிய பின் உவமத்திற்குப் பொருண்மையோடு உள்ள தொடர்பைக் கூறுகின்றார்.

உவமப்பொருளின் உற்றதுணரும்
தெளி மருங்குளவே திறத்தியலான - தொல். பொருள். 291

உரையாசிரியர் இதனை உணர்ந்திருந்தனர் என்பது பேராசிரியர் "மற்றிரு திணைப்பொருளும் உவமம் பற்றி வழக்கினுள் அறியப் படுதலானும், உவமம் பற்றியும் பொருள் கூறுகின்றான் என்பது" (தொல். பொருள். பேரா. ப. 57) எனக் கூறுவதனால் புலனாகும். இதுவன்றித் தொடர்ந்து வரும் நூற்பாக்களும் (தொல். பொருள். 297 ◌ 302) உவமை, யார் யார் கூற்றுள் வரும், அதன்கண் எவ்வகைப் பொருள் தோன்றும் என்றெல்லாம் கூறுவது, உவமை, பொருளை விளக்குவதற்கு உரிய கருவியே என்பதைத் தெளிவாகக் காட்டும். எனவே, உவமவியலின் இடம் மொழிப்பொருண்மைக்கு உரியதே தவிர இலக்கியத்திற்கு அணி செய்வதல்ல என்பது தெளிவாகும். செய்யுளில் முற்றிலும் இலக்கியக் கோட்பாடுபற்றிப் பேசும் பகுதி. செய்யுள் என்ற சொல் இயல்பான வழக்காகிய பேச்சில் நின்றும் வேறுபட்டு எண்ணி யாக்கப்படும் அனைத்து மொழி வடிவங்களையும் குறிக்கிறது (தொல். பொருள். 386). இவற்றுள் நூல் தவிர மற்றவற்றை இலக்கிய வடிவங்களாகக் கொள்ளலாம். ஆகையால், இவ்வியல் இலக்கியக் கோட்பாடு பேசும் பகுதி எனக் கொள்வது பொருத்தமாகும். மீனாட்சிசுந்தரன் (1969), பெரியகருப்பன் (1975, 1979), பாலகிருட்டினன் (1998) ஆகியோர் இதனை நன்குணர்ந்து விளக்கியுள்ளனர். இவ்வியலில் தொல்காப்பியர் கூறும் செய்திகளைப் புரிந்துகொண்டு பொருளதிகாரத்தில் இதன் இடத்தைப் புரிந்துகொள்வது மற்ற இயல்கள் பேசுவது மொழிப்பொருண்மையே என்பதைப் புரிந்துகொள்ளத் துணை புரியும்.

தொல்காப்பியர் செய்யுளின் உறுப்புகளாக 34-ஐக் கூறுகின்றார். இவை பிற்கால யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை போன்ற நூல்கள் கூறும் மாத்திரை, எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை போன்ற செய்யுள் வடிவம் பேசும் உறுப்புகளும் திணை, கைகோள், கூற்றுவகை, கேட்போர், களன், காலம், பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம், பொருள் போன்ற பொருள் பற்றிய உறுப்புகளும் வண்ணம், வனப்பு, அம்மை, அழகு, தொன்மை, தோல் போன்ற வடிவம், பொருள் என்ற இரண்டையும் பற்றிய உறுப்புகளும் ஆகும். இவற்றுள் திணை, கைகோள், கூற்றுவகை, கேட்போர், மெய்ப்பாடு ஆகியவை முன் அகத்திணையியல் முதலான ஆறு இயல்களில் விரிவாகப் பேசப்பட்டவை. மீண்டும் இங்குச் செய்யுள் உறுப்புகளாகக் கூறப்பட்டு சுருக்கமாக இலக்கணம் கூறப்படுவது உட்கொள்ளத்தக்கது. முன் அவ்வியல்களில் பேசப்பட்ட நோக்கம் மொழிப்பொருண்மை விளக்குவது. இங்கே பேசப்படுவது செய்யுள் என்னும் இலக்கியத்தின் முற்றமைப்பின் பகுதியாக, அதன் பாடுபொருளாக. எனவே, முந்தைய ஐந்தியல்கள் பேசியது இலக்கியப் பாடுபொருள் அல்ல; வழக்கும் செய்யுளுமாய் அமைந்த மொழியின் பொருண்மையே என்பது வலியுறுகிறது.

அடுத்து, இவை தவிர பொருள் என்ற ஒன்றைச் செய்யுள் உறுப்பாகக் கூறுவதும் அதற்குக் கூறும் இலக்கணமும் கூர்ந்து ஆராய்தற்குரியன.

இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்
ஒழுக்கமும் என்றிவை இழுக்கு நெறியின்றி
இதுவாகு இத்திணைக்கு உரிப்பொருள் என்னாது
பொதுவாய் நிற்றல் பொருள்வகை என்ப - தொல். பொருள். 509

முதல் ஐந்து இயல்களில் வழக்கிற்கும், செய்யுளுக்கும் உரிய பொருண்மை அமைப்பை திணை, முதல், கரு, உரி, களவு, கற்பு என்பனவாக வகுத்துக் கூறினார். ஆனால் இலக்கியம் செய்வோர் இவ்வமைப்புக் கட்டுப்பாட்டை மீறியும் அவற்றினின்று வேறுபட்டும் செய்யுள் செய்வார் ஆதலின் அவ்வமைப்பு முறையிலடங்காத பொதுவான பொருளை இங்கே இலக்கியம் அல்லது செய்யுளின் சிறப்பியல்பாய் விளக்குகிறார். குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் போன்ற திணைகளையும் அவற்றிற்குரிய உரிப்பொருளாகப் புணர்தல், பிரிதல், இருத்தல், ஊடல், இரங்கல் போன்றவற்றையும் கூறியபின் களவு, கற்பு எனக் கைகோள்களையும் வகுத்த தொல்காப்பியர் அக்கலைச்சொற்களைப் பயன்படுத்தாது, இன்பம், இடும்பை, புணர்வு, பிரிவு, ஒழுக்கம் எனப் பொதுச் சொற்களைப் பயன்படுத்துவதும் மீண்டும் பொதுவாய் நிற்றல் என்று கூறுவதும் அவ்வைந்து இயல்களில் வகுத்த பொருண்மை அமைப்பை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறார் என்பதையே காட்டுகிறது. இது செய்யுள் அல்லது இலக்கியக் கண்ணோட்டம். இலக்கிய ஆசிரியனின் மொழி மரபை மீறும் உரிமையைக் காட்டும் கண்ணோட்டம். நெடுநல்வாடை, பட்டினப் பாலை, போன்ற பத்துப்பாட்டுப் பாடல்கள் அகப் பொருண்மையையும், புறப் பொருண்மையையும் கலந்து செய்யுள் இயற்றுவதற்கு, அமைதி கூறும் இலக்கியக் கண்ணோட்டம். இவை அனைத்தும் பொருளதிகாரத்தில் இலக்கியக் கோட்பாடு பற்றிப் பேசுவது செய்யுளியல் மட்டுமே; மற்ற இயல்கள் மொழிப்பொருண்மை அமைப்பைப் பேசுவனவே என்பதை வலியுறுத்துகின்றன.

அடுத்து, மரபியல் பேசும் செய்திகளின் இயல்பு ஆராயப்படும். மொழியமைப்பில் அடுக்கு நிலை (Paradigmatic) உறவு, தொடர் நிலை (Syntagmatic) உறவு என்ற இருவகை, மொழிக் கூறுகளுக்கிடையே செயல்பட்டு மொழியமைப்பை விளங்கிக்கொள்ள உதவுகின்றன. அடுக்கு நிலை ஒரே சூழலில் வரும் பல்வகை அலகு (unit) களிடையே வரும் வேற்றுநிலை (contrastive) உறவு. இது வடிவமைப்பில் ஒரு மொழியின் ஒலியன்கள், உருபன்கள், சொல்வகைகள் ஆகியவற்றைக் கண்டறிய உதவும். இவ்வலகுகள் ஒன்றையடுத்து ஒன்று வருவதில் உள்ள கட்டுப்பாடுகள் தொடர்நிலை உறவு. இவ்வுறவுகள் பொருளமைப்பிலும் வரும்.

இது ஓர் உயரமான மரம்

என்ற வாக்கியத்தில் உயரமான என்ற சொல்லின் இடத்தில் "குட்டையான" என்ற எதிர்ச்சொல் அடுக்குநிலையில் வேறுபடும். நல்ல - கெட்ட, உயர்ந்த - தாழ்ந்த போன்ற எதிர்ச்சொற்கள் இவ்வாறு வேறுபடுபவை.

ஞாயிறு காலையில் கிழக்கே தோன்றும்

என்ற வாக்கியத்தில் உள்ள நான்கு சொற்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்நிலையில் பொருள் உறவு உடையவை.

ஞாயிறு மாலையில் மேற்கே மறையும்

என்ற வாக்கியத்துடன் ஒப்பிட்டால் இத்தொடர் உறவின் சிறப்பு புலப்படும். இவ்வமைப்பை மாற்றினால் பிழையான வாக்கியம் தோன்றும். ஞாயிறு காலையில் மேற்கே தோன்றும் இவ்வாக்கியம் வடிவமைப்பில் இலக்கணப் பிழையற்ற வாக்கியம். ஆனால் பொருளமைப்பில் தொடர் உறவில் பிழையானது. இவை வாக்கியத்தில் உலகப் பொருண்மையின் மாறாத இயல்பின் அடிப்படையில் பயன்படுத்தப்படுபவை. ஆனால் சில சொற்களின் தொடர் உறவுகள் மரபின் அடிப்படையில் வருபவை.

ஆவின் கன்று குதிரைக் குட்டி

கோழிக் குஞ்சு தென்னம் பிள்ளை

போன்ற தொடர்களில் இளம்பருவப் பெயர்களை மரபின் மூலமே அறிய வேண்டும். மாறிவழங்கினால் பொருள் நிலையில் பிழையான வாக்கியங்கள் வரும். இத்தகு மரபு அடிப்படையிலான சொற்களின் தொடர் நிலைக் கட்டுப்பாட்டையே, இளமைப் பெயர்கள், ஆண்பாற் பெயர்கள், பெண்பாற் பெயர்கள், ஆகியவற்றைப் பேசும்போது மரபியலில் கூறுகிறார். இவை போன்ற சொற்களிடையே உள்ள மரபு பற்றிய பொருண்மை உறவுகளையே மரபியல் ஆராய்கிறது. மொழிப்பொருண்மை இயலில் இவை சொற்சேர்க்கைக் கட்டுப்பாடுகள் (Collocational restrictions) என வழங்கப்படும். எனவே, மரபியல் பேசுவதும் பொருண்மை அமைப்புப் பற்றிய செய்தியே. இதுவரை ஆராய்ந்தவற்றின் அடிப்படையில் பொருளதிகாரத்தில் செய்யுளியல் தவிர்த்த மற்ற இயல்களில் பேசப்படுபவை மொழிப் பொருண்மை அமைப்பிற்குரிய செய்திகளே; அவை வழக்கிற்கும் செய்யுளுக்கும் உரியவை.‌ செய்யுளியல் மட்டுமே இலக்கியக் கோட்பாடுகளை ஆராய்கிறது. இவ்விளக்கமே பொருளதிகார இயல்களின் அமைப்புத் தருக்கமுறையோடு பொருந்திவருகிறது என்பது புலனாகும்.

6. தொல்காப்பியத் தரவு

அணுகுமுறையில் அடுத்ததாக நோக்க வேண்டியது தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலுக்கு அடிப்படையாகத் தொல்காப்பியர் கொண்ட தரவுகள் (data) யாவை? அத்தரவுகளின் இயல்பு என்ன? என்று அறிந்து கொள்வதும் அந்த அடிப்படையில் நூலின் செய்திகளை அணுகுவதும்.

பண்பாட்டு வளர்ச்சியுற்ற மக்களால் பேசப்படும் மொழியின் தரவுகள் எப்பொழுதும் பரந்துபட்டவையாகும். வழக்கு அல்லது பேச்சின் வட்டார, சமுதாய வேறுபாடுகளும் எழுத்து மொழியின் பல்துறை நூல்களும் மொழித்தரவுகளே. வேறுபாடு (Variation) இத்தரவின் அடிப்படை இயல்பு. ஆனால் இலக்கண நூலாசிரியர் வேறுபாட்டை இயல்பாகக் கொண்ட மொழி முழுவதையுமோ, தான் சிறப்புடையதாகக் கருதும் ஒருவகையையோ, தகைவழக்கு (Standard usage) என்று கருதப்படுவதையோ, இலக்கியமொழியை மட்டுமோ தரவாகக் கொண்டு இலக்கணம் செய்யலாம். ஆங்கில மொழியை ஆய்வோர் இங்கிலாந்து அரசன் அல்லது அரசி பேசும் மொழி (King’s/Queen’s English) அல்லது இலண்டன் மாநகரில் வழங்கும் மொழியையே தகைவழக்காகக் கொண்டு ஆய்வர். ஆனால் சமுதாய மொழியியல் (Socio◌linguistics) அடிப்படையில் ஆராய்வோர், மொழி வேறுபாட்டிற்குச் சிறப்பிடம் கொடுத்து ஆய்வர். இக் கண்ணோட்டத்தில் தொல்காப்பியத்திற்குத் தரவாய் அமைந்தது எது? பாயிரம் விளக்குவதன் அடிப்படையிலும், தொல்காப்பியர் மூன்று அதிகாரங்களிலும் பேசும் செய்திகளின் அடிப்படையிலும் வழக்கு அல்லது பேச்சும் (speech) செய்யுளுமே. பழந்தமிழ் வழக்கு அக்காலத்துத் தகை வழக்காகக் கருதப்பட்ட செந்தமிழ் நிலத்தும் செந்தமிழ் சார்ந்த பன்னிரு நிலத்தும் பேசப்பட்டது. பரந்துபட்ட உறழ்ச்சி வடிவங்களைக் கொண்டது. கல்தீது, கற்றீது, கஃறீது (தொல். எழுத்து. 369, 370) பீர்ங்கோடு, பீரங்கோடு (தொல். எழுத்து. 364, 366), தேன்குடம், தேற்குடம், தேக்குடம் (தொல். எழுத்து. 341) போன்ற எண்ணற்ற உறழ்ச்சிகள் இதனைக் காட்டும். இத்துடன் பழந்தமிழ்ச் செய்யுளும் அவர்க்குத் தரவாய் அமைகிறது. தொல்காப்பியரால் ஆராயப்படும் பழந்தமிழ்ச் 'செய்யுள்' பிற்கால யாப்பருங்கலக்காரிகை காட்டும் மரபு போல் எழுத்து, சீர், அடி, தளை, தொடை வரையறை கொண்ட நால்வகைப் பா அல்லது பாட்டை மட்டும் குறிப்பது அல்ல. அவற்றுடன் உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் ஆகியவற்றையும் (தொல். பொருள். 384) உள்ளடக்கியது. இச்செய்யுள் ஆக்கத்திற்குப் பயன்படும் சொற்கள் செந்தமிழ் நிலத்து வழக்குச் சொற்களும் (தொல். சொல். 398), சொற்பன்மையும்பொருட்பன்மையும் கொண்ட திரிசொற்களும் (தொல். சொல். 398), செந்தமிழ் நிலம் சேர்ந்த பன்னிரு நிலத்தும் பேசப்பட்ட வட்டார வழக்குச் சொற்களாம். திசைச் சொற்களும் (dialectal words) (தொல். சொல். 400), இவையன்றி வட சொற்களும் (தொல். சொல். 401) ஆகும். எனவே, தொல்காப்பியத்திற்குத் தரவாய் அமைந்தது வேறுபாடற்ற ஒற்றுமை (uniformity) உடைய மொழி அல்ல. பன்முக வேறுபாடுகளைக் கொண்ட வழக்கும் (பேச்சும்) அதன் அடிப்படையில் உருவான ("செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி" (தொல். சொல். 398) "செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தங்குறிப்பன" (தொல். சொல். 400) செய்யுளும் "இயற்சொல், திரிசொல், திசைச்சொல் வடசொல்லென்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே" (தொல். சொல். 397) ஆகிய இருவகைப் பயன்பாட்டுக் களங்களில் தொழிற்பட்ட தமிழ்மொழியே. இப்பன்முக மொழியின் எழுத்தமைதி, சொல்லமைதி, பொருளமைதியே தொல்காப்பிய நூற்பொருள். இம்மூவகை அமைப்புகளும் வழக்கும் செய்யுளுமாகிய அப்பன்முகப் பயன்பாட்டுக் களத்தின் பொதுமையையும் வேறுபாட்டையும் காட்டி நிற்கின்றன. ஒருவகையில் வழக்கிற்கு உரிய கட்டமைப்பு செய்யுளுக்கும் அடிப்படையாய் அமைகிறது. எனினும் செய்யுள் தனக்கென வடிவக் கூறுகள், பொருட்கூறுகள் வடிவும் பொருளும் கலந்த கூறுகளைக் கொண்டு தனித்து நிற்கின்றது. எனவே, இவ்வேறுபாடு உடைய தரவின் தன்மை தொல்காப்பிய, இலக்கணத்தின் அமைப்பு, செய்திகள் முதலியவற்றைப் பாதிப்பது இயல்பு என உணர்ந்து நூலை அணுகிப் புரிந்துகொள்ள வேண்டும். இதன் காரணமாகவே மூன்று அதிகாரங்களிலும் வழக்கிற்கும் செய்யுளுக்கும் உரிய பொதுவான இலக்கணத்தைக் கூறி, வழக்கிற்கே உரியனவற்றையும் செய்யுளுக்கே உரியனவற்றையும் தனியாகப் பேசுகிறார் (தொல். எழுத்து. 51, 214, 238, 259, 289, 317, 357; தொல். சொல். 18, 27, 39, 50, 51, 108, 195, 211, 246; தொல். பொருள். 213, 214, 292, 613, 638). மேலும் பொருள் அமைப்பைப் பேசும் பொருளதிகாரத்தில் செய்யுள் இலக்கணம் அல்லது இலக்கிய இலக்கணம் ஓர் இயலில் (செய்யுளியல்) பேசப்படுவது செய்யுள் அல்லது இலக்கிய மொழியும் தொல்காப்பியத்திற்குத் தரவாய் அமைவதனாலேயே. செய்யுள் என்ற இன்னொரு மொழி ஊடகத்தின் (medium) சிறப்பு அமைப்புக்கூறுகள் மொழியின் எழுத்து, சொல், பொருள் அமைப்புப் பேசப்பட்ட பின் இறுதியாகப் பொருளதிகாரத்தின்கண் பேசப்படுகின்றன.

துணைநூல்கள்

1.
அகத்தியலிங்கம், ச., க. பாலசுப்பிரமணியன், 1974. "தமிழிலக்கண மரபு" - ச. அகத்தியலிங்கம் க. பாலசுப்பிரமணியன் (பதிப்பு), இலக்கண ஆய்வுக் கட்டுரைகள் - 1, (ப. X-Liii) அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்.
2.
அடிகளாசிரியன், 1969. தொல்காப்பியம், எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரை, கரந்தைப்புலவர் கல்லூரி, தஞ்சாவூர்.
3.
ஆபிரகாம் அருளப்பன், வ. அய். சுப்பிரமணியம் (பதிப்பு) 1963, தொல்காப்பியம், சொல்லதிகாரம், உரைக் கோவை, அருள் அச்சகம், திருநெல்வேலி.
4.
கிருட்டினமூர்த்தி, கோ., 1990. தொல்காப்பிய ஆய்வின் வரலாறு, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
5.
குமாரசாமிராஜா, 1974. "குற்றுகரமா, முற்றுகரமா?" ச. அகத்தியலிங்கம், க. பாலசுப்பிரமணியன் (பதிப்பு), இலக்கண ஆய்வுக் கட்டுரைகள் - 1 (ப. 15-28) அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்.
6.
கோவிந்தசாமிப்பிள்ளை, இராம., 1967. தொல்காப்பியம், எழுத்ததிகாரம், நச்சினார்க்கினியார் உரை, சரஸ்வதி மகால், தஞ்சை.
7.
சிதம்பரநாத செட்டியார், 1992. English - Tamil Dictionary, University of Madras, Chennai.
8.
சுவலபில், கமில் (Kamil Zvelebil), Comparative Dravidian Phonology, Mouton, The Hague.
9.
சுவலபில், கமில், 1974. Tamil Literature, Otto Harassowitz, Wise baden.
10.
செல்வநாயகம், பி., 1969. “Some problems in the study of Tolkappiyam in relation to Sangam poetry” in the Proceedings of the First International Conference Seminar of Tamil Studies. 1966, Vol. II 38-44, Kuala Lumpur.
11.
தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையர் உரை, ஆறுமுகநாவலர் (பதிப்பு), வித்தியாநுபாலனயந்திர சாலை, சென்னப்பட்டணம், 1934.
12.
தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை, 1953.
13.
தொல்காப்பியம், பொருளதிகாரம், நச்சினார்க்கினியார் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை, 1971.
14.
தொல்காப்பியம், பொருளதிகாரம், பேராசிரியர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை, 1972.
15.
பாலகிருட்டிணன், நா., 1988. தொல்காப்பியப் பொருளதிகார வழி நற்றிணை ஓர் ஆய்வு, சென்னை.
16.
பாலசுப்பிரமணியன், க., 1978, The concept of sentence structure in Tolkappiyam” in Studies in Early Dravidian Grammars, Ed. S.Agesthialingom & N. Kumaraswami Raja, Annamalai University, Annamalai Nagar. P. 23-38.
17.
பாலசுப்பிரமணியன், க., 1984. "தொல்காப்பியத்தில் நூன்மரபின் இடமும் சிறப்பும்", தமிழ்க்கலை 2:2,3, ப. 71-72. தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
18.
பாலசுப்பிரமணியன், க., 1987. "தொல்காப்பிய எழுத்ததிகார அமைப்புத் தருக்க முறை", இலக்கணக் கருவூலம்-1, தமிழ்த்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்.
19.
பாலசுப்பிரமணியன், க., 1997. "Ancient Tamil writing system as revealed in the Tamil grammatical Literature” in K.P. Acharya (Ed.) On Writing, Central Institute of Indian Languages, Mysore, P. 34-40.
20.
பாலசுப்பிரமணியன், க. 1998. "இலக்கணத்தில் தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் இடம்”, ஜீன் லாறன்ஸ், கு. பகவதி (பதிப்பு), தொல்காப்பிய இலக்கியக் கோட்பாடுகள், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், சென்னை.
21.
பாலசுப்பிரமணியன், க. 1999. தொல்காப்பியப் பொருளதிகாரம்: மொழிப்பொருண்மையியல் நோக்கு, டாக்டர். ரா. பி. சேதுப்பிள்ளை வெள்ளிவிழா நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், தமிழ் மொழித்துறை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
22.
பாலசுப்பிரமணியன், க, 2000. "தொல்காப்பியரின் பொருண்மையியல் கோட்பாடு", தொல்காப்பிய இலக்கண மொழியியல் கோட்பாடுகள் கருத்தரங்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
23.
பாலசுப்பிரமணியன், க, 2001, Studies in Tolkappiyam, Annamalai University, Anamalai Nagar.
24.
பெரியகருப்பன் இராம, 1975. சங்க இலக்கிய ஒப்பீடு, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.
25.
பெரியகருப்பன், இராம. 1979, ஒப்பிலக்கிய அறிமுகம், சோலை நூலகம், மதுரை.
26.
மீனாட்சிசுந்தரன், தெ. பொ, 1969, "Tolkappiyar’s Literary Theory. Proccedings of the First International Conference Seminar of Tamil Studies, Vol. II Kualalumpur.
27.
R.H. Robins, 1967, A short History of Linguistics, Longmans, London.
28.
C.F. Hockett, 1958, A Course in Modern Linguistics, McMillan, New York.














தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி - Site is best viewed with Internet Explorer & 1024*768 Screen